மாவட்ட வளர்ச்சிப் பணிகள் ஆய்வு
மதுரை : மதுரை மாவட்டத்தில் நடந்து வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடந்தது.மாவட்ட கலெக்டர் சங்கீதா முன்னிலை வகித்தார். போலீஸ் எஸ்.பி.,அரவிந்தன், கூடுதல்கலெக்டர் மோனிகா ராணா, மாநகராட்சி கமிஷனர் தினேஷ்குமார், போலீஸ் துணைகமிஷனர்அனிதா, டி.ஆர்.ஓ., சக்திவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அருண்தம்புராஜ் பேசியதாவது: பொது மக்கள் நலனுக்கான திட்டப் பணிகளை எவ்வித தொய்வும் இன்றி விரைந்து நிறைவேற்ற வேண்டும். மேம்பால பணிகள், செல்லுார் பகுதியில் தண்ணீர் வெளியேறுவதற்கான சிமென்ட் கால்வாய் திட்ட கட்டுமான பணிகளை துரிதமாக மேற்கொண்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும். அதேபோல மாநகராட்சி பகுதியில் செயல்படுத்தப்படும் பாதாள சாக்கடை திட்டப் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தி உரிய காலத்திற்குள் முடிக்க வேண்டும். மக்களுடன் முதல்வர்,உங்கள் தொகுதியில் முதலமைச்சர் போன்ற திட்டங்களின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனுக்குடன் தீர்வு காண வேண்டும். கோடை நெருங்குவதால் குடிநீர் திட்டப் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.ஊரக, நகர பகுதிகளில் பயன்பாட்டில் உள்ள குடிநீர் திட்டப் பணிகளை பராமரிப்பது, முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வதை தேவைக்கேற்ப குடிநீர் ஆதாரம் ஏற்படுத்த முனைப்புடன் செயல்பட வேண்டும். சாலை மேம்பாட்டு பணிகள், தெருவிளக்கு பணிகளை குறைபாடின்றி செயல்படுத்த வேண்டும் என்றார்.