டவுசர், மங்கி குல்லா கொள்ளையர் கைது
மதுரை; மதுரை புறநகர் பகுதியில் கடப்பாரையால் வீட்டை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மங்கி குல்லா கொள்ளையர் இருவர் கைது செய்யப்பட்டனர்.மதுரை நாகமலைபுதுக்கோட்டை ராம்கோ நகரில் கடந்தாண்டு நவ.,5ல் டவுசர், மங்கி குல்லா அணிந்து வந்த இருவர், ஒரு வீட்டின் கதவை கடப்பாரையால் குத்தி திறக்க முயன்றனர். வீட்டினுள் இருந்தவர்கள் போலீசிற்கு தகவல் தெரிவித்தனர். அதுபோல் அருகில் உள்ள மற்றொரு வீட்டிலும் முயற்சித்தனர். போலீசார் வருவதை பார்த்து முயற்சியை கைவிட்டு கொள்ளையர் தப்பிச்சென்றனர்.இரு ஆண்டுகளாக 'மங்கி கொள்ளையர்களாக' வலம் வந்து மதுரை புறநகரில் திருட்டு, கொள்ளையில் ஈடுபட்டு வந்த ஈரோடு பனையம்பள்ளி சிவா 39, கூட்டாளி சிவகங்கை மில் கேட் மருதுபாண்டி 35, ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீது தமிழகம் முழுவதும் பல்வேறு வழக்குகள் உள்ளன. சிறையில் இருந்தபோது நட்பாகி கொள்ளையில் ஈடுபட்டு வந்துள்ளனர். இவர்களை கைதுசெய்த மதுரை போலீசாரையும், உதவியாக இருந்த ஈரோடு போலீசாரையும் அதிகாரிகள் பாராட்டினர்.