சமவேலைக்கு சமஊதியம் விவகாரம்; டிச., 24 ல் மூவகை போராட்டங்கள்; ஆசிரியர்கள் அறிவிப்பு
மதுரை: தமிழக தொடக்க கல்வியில் சமவேலைக்கு சமஊதியம் வழங்க கோரி பாதிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் சார்பில் டிச., 24 ஒரே நாளில் மறியல், முற்றுகை, சிறை நிரப்புவது என மூவகை போராட்டங்களை அறிவித்துள்ளனர். மாநில தொடக்க கல்வியில் 31.05.2009க்கு முன் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும், அதற்கு ஒரு நாள் பின்னர் அதாவது 01.06.2009ல் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு உள்ள சம்பள முரண்பாடுகளை நீக்க கோரி பாதிக்கப்பட்ட 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் 16 ஆண்டுகளாக போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இப்பிரச்னைக்கு தீர்வுகாணப்படும் என அ.தி.மு.க., தி.மு.க., என மாறி மாறி தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகள் அளித்தும் தீர்வு கிடைக்கவில்லை. கடந்த அதிமுக ஆட்சியில் எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின், 'தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் இக்கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் நீங்கள் கோட்டையில் வந்து என்னை கேட்கலாம்' என வாக்குறுதி அளித்தார். ஆனால் ஆட்சி நிறைவடைய உள்ள நிலையிலும் கோரிக்கை நிறைவேறவில்லை. எதிர்க்கட்சி தலைவராக இருந்த முதல்வர் ஸ்டாலின் அளித்த வாக்குறுதியை காப்பாற்ற வலியுறுத்தி டிச.,24 ல் தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் (எஸ்.எஸ்.டி.ஏ.,) அறிவித்துள்ளது. இதுகுறித்து எஸ்.எஸ்.டி.ஏ., மாநில பொதுச் செயலாளர் ராபர்ட் கூறியதாவது: நான்கரை ஆண்டுகளாக 30க்கும் மேற்பட்ட போராட்டங்களை நடத்திவிட்டோம். இதுவரை எவ்வித முன்னேற்றமும் இல்லை. முதல்வர் ஸ்டாலின் முன்னர் கோரியது போல் கோட்டைக்கு சென்று அவரிடம் கோரிக்கையை வலியுறுத்த முடிவு செய்துள்ளோம். அதேநேரம் மறியல், சிறை நிரப்பும் போராட்டங்களையும் ஒரே நாளில் பல்வேறு இடங்களில் நடத்த முடிவு செய்துள்ளோம். 16 ஆண்டுகளாக சம்பளத்தை இழந்து ஆசிரியர்கள் வாழ்வாதாரம் பாதித்து வருகின்றனர். டிச.,24 ல் நடத்தும் போராட்டம் வலுவானதாக இருக்கும் என்றார். பாக்ஸ்...---* போராட்டத்திற்குதள்ளும் நிதித்துறை இப்பிரச்னை குறித்து கல்வி உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: இடைநிலை ஆசிரியர்களின் இப்போராட்டம் நியாயமானது. இதை கல்வித்துறை புரிந்துகொண்டு துறை அமைச்சரிடமும் விளக்கினோம். அதை தாண்டி அமைச்சர் தரப்பில் முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்கும் கொண்டு சேர்ந்தது. ஆனால் நிதித்துறை அனுமதி கிடைக்கவில்லை. அரசு ஊழியர்கள் சார்ந்த பிரச்னைகள் குறித்து நிதித்துறை அதிகாரிகளை கேட்டால், 'ஏற்கனவே ஆசிரியர்கள் போராடுகின்றனர். அவர்களுக்கான கோரிக்கையை நிறைவேற்றுவதற்கான நிதியில்லை' என காரணம் சொல்லுகின்றனர். ஆசிரியர்கள் தரப்பு சென்று கேட்டால், அரசு ஊழியர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவது, பொங்கல் பொருட்கள், ரொக்கம் வழங்க நிதியில்லை' என மாற்றி மாற்றி காரணம் கூறுகின்றனர். இதனால் தான் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் போராட்டங்களை முன்னெடுக்கின்றனர் என்றார்.