தமிழக அரசின் நில ஒருங்கிணைப்புச் சட்டம் ரத்து செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
மதுரை: விவசாயிகளை தெருவில் நிறுத்தும்' வகையில் விவாதமின்றி நிறைவேற்றப்பட்ட நில ஒருங்கிணைப்பு சட்டத்தை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பிரிட்டிஷ் ஆட்சியின் போது 1894 ல் உருவாக்கப்பட்ட நிலம் கையகப்படுத்துதல் சட்டம் 2013 வரை இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்தச் சட்டத்தின் மூலம் அரசுக்கு ஏதாவது நிலம் தேவைப்பட்டால் தனது அதிகாரத்தை பயன்படுத்தி அதை கையகப்படுத்திக்கொள்ளும். அதற்கான இழப்பீட்டுத் தொகையையும் அரசே நிர்ணயிக்கும். தேவைப்பட்டால் பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றம் செல்ல வேண்டும். நிலத்தையும் இழந்து நிலத்துக்கான பணத்தையும் பெற முடியாமல் வழக்கு விசாரணை நீளும். எனவே நில உரிமையாளர்களுக்கு பாதுகாப்பு, நியாயமான இழப்பீடு, மறுவாழ்வை உத்தரவாதம் செய்யும் வகையில் 2013ல் நிலம் கையகப்படுத்துதல் சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் புதிதாக 2023ல் தமிழக அரசு நில ஒருங்கிணைப்பு சட்டத்தை கொண்டுவந்தது. அதாவது 250 ஏக்கருக்கு மேற்பட்ட நிலப்பரப்பு தேவைப்படும் சிறப்புத் திட்டங்களுக்கு இச்சட்டம் பொருந்தும். ஒரு திட்டம் மாநிலத்துக்கு முக்கியமானது என்று நினைத்தால் அதை சிறப்புத் திட்டமாக அரசு அறிவிக்கும். கையகப்படுத்துவதற்கு முன்பாக அறிவிப்பு வெளியிடுதல், கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தினாலும் நிபுணர் குழுவின் முடிவே இறுதியானது. இதில் தனியாருக்குச் சொந்தமான நிலம் இருந்தாலும் கையகப்படுத்தப்படும் என்பதால் ஆபத்தான இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்கிறார் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு மாநிலத் தலைவர் பி.ஆர். பாண்டியன். அவர் கூறியதாவது: நில ஒருங்கிணைப்புச் சட்டத்தின் மூலம், ஆறு, ஏரி, குளம், நீர்நிலைகளின் வகைப்பாட்டை மாற்றி கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கலாம். இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் இதுபோன்ற கொடுமையான சட்டம் நிறைவேற்றப்படவில்லை. நிலம் மட்டுமல்ல, வீடு இருந்தால் அவற்றையும் பறித்து இந்தியக் குடிமகன் என்ற உரிமையையும் பறிக்கிறது. விவசாயிகளை பாதிக்கும் இச்சட்டத்தை தமிழக அரசு ரத்து செய்து அறிவிக்க வேண்டும். 2021ல் நெல் டன்னுக்கு ரூ.2500க்கு தருகிறேன் என்று சொல்லிவிட்டு 2025 ம் ஆண்டில் ரூ.2500 அறிவித்துள்ளது. இந்த நான்கரை ஆண்டுகளில் நெல்லின் உற்பத்தி செலவு அதிகரித்துள்ளதால் அடுத்து டன்னுக்கு ரூ.3000 ஆக அதிகரிப்பது கேள்விக்குறியாக உள்ளது. விவசாயிகளின் நலனுக்கு எதிராக செயல்படும் போக்கை தமிழக அரசு கைவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.