உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / குழந்தையைக் கொன்று நாடகமாடிய தந்தை கைது

குழந்தையைக் கொன்று நாடகமாடிய தந்தை கைது

திருமங்கலம் : விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு கோட்டையூரை சேர்ந்தவர் பாண்டி செல்வம் 25, இவரது மனைவி வனிதா 24. திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது. இரண்டரை வயதில் பார்கவி என்ற பெண் குழந்தை இருந்தது. பாண்டிசெல்வம் கப்பலுார் சிட்கோவில் கட்டட வேலைக்கு பயன்படும் மாவு தயாரிக்கும் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலை செய்கிறார். இவரது மனைவி விருதுநகர் பகுதி தீப்பெட்டி கம்பெ னியில் வேலை செய்கிறார். குடும்பத் தகராறால் கணவன் மனைவி தனித்தனியே வசிக்கின்றனர். பார்கவியை வனிதா தீப்பெட்டி கம்பெனிக்கு அழைத்துச் செல்வார். தீப்பெட்டி கம்பெனிக்கு அழைத்து சென்றால், குழந்தைக்கு பாதிப்பு ஏற்படும் என கூறி பாண்டி செல்வம் குழந்தையை தான் வேலை செய்யும் நிறுவனத்திற்கு அழைத்து சென்றுள்ளார். ஆக.25ல் தனது குழந்தையோடு பாண்டிசெல்வம் வேலைக்கு வந்துள்ளார். காலை 11:00 மணிக்கு கணவன் மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. குழந்தை பார்கவி அழுதது. பாண்டி செல்வம், குழந்தையை அடித்து தண்ணீர் தொட்டிக்குள் தள்ளிவிட்டார். சிறிது நேரம் கழித்து பார்த்த போது குழந்தை இறந்தது தெரிந்தது. குழந்தையை மாவு பொருள் பேக் செய்யும் சாக்கு மூடையில் கட்டி இயந்திரத்தின் அடியில் வைத்து அங்கிருந்து சென்றார். குழந்தையை காணவில்லை என போலீசிலும் புகார் அளித்துள்ளார். நேற்று கம்பெனியில் முத்துக்குமார் என்பவர், இயந்திரத்தை ஓட்ட முயன்ற போது துர்நாற்றம் வீசியது. மூடை இருந்ததும் தெரிந்தது. போலீசார் மூடையை திறந்து பார்த்தனர். உள்ளே குழந்தையின் உடல் அழுகிய நிலையில் இருந்தது தெரிந்தது. குழந்தையை கொன்றதை பாண்டி செல்வம் ஒப்புக்கொண்டார். அவரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ