அரசு போக்குவரத்துக்கழகஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
மதுரை: மதுரையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தலைமை அலுவலகம் முன்பு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல், பணிக்கொடை வழங்குதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழகம் முழுவதும் மண்டல அளவில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. மதுரையில் தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். பொருளாளர் சவுரிதாஸ் உட்பட பலர் பங்கேற்றனர். பொதுச்செயலாளர் தேவராஜ் கூறியதாவது: 2023 ஜூலைக்கு பிறகு ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு அரசு பணப்பலன்களை 25 மாதங்களாக தராமல் உள்ளது. முதல்வர் ஸ்டாலின் அறிவித்த தேர்தல் வாக்குறுதியில் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்துவதாகக் கூறி இதுவரை செயல்படுத்தவில்லை. தொழிலாளிக்கு வர வேண்டிய பணத்தை தராமல் இழுத்தடிப்பது நம்பிக்கைத் துரோகம். போலீஸ் துறையில் மோப்ப நாய்க்குக் கூட விலைவாசிக்கு ஏற்ப பென்ஷன் மாற்றம் செய்யப்படுகிறது. ஆனால் போக்குவரத்தில் ஓய்வு பெற்ற 95 ஆயிரம் தொழிலாளர்களுக்கு 75 சதவீதம் உயர்வு பெறுவதற்கே போராட வேண்டியுள்ளது. 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி ஓய்வுபெறும் தொழிலாளிக்கு தர வேண்டிய வருங்கால வைப்பு நிதி, விடுப்புச் சம்பளம், பணிக்கொடை, இதர பணப்பலன்களை தராமல் வெறுங்கையுடன் அனுப்புகின்றனர். கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்காவிடில் சென்னையில் போராட்டம் நடத்துவோம் என்றார். ஆர்ப்பாட்டத்தில் பொருளாளர் சவுரிதாஸ் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.