மணல் திருட்டு வழக்கு உயர்நீதிமன்றம் முடித்து வைப்பு
மதுரை: திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை குழிப்பட்டி வெங்கிடுசாமி. இவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: குழிப்பட்டி மஞ்சளாறு பகுதியில் சட்டவிரோதமாக இயந்திரங்கள் மூலம் மணல் அள்ளப்படுகிறது. இதற்கு சில அலுவலர்களும் உடந்தையாக உள்ளனர். கண்டித்து மக்கள் போராடினர். மஞ்சளாற்றுப் படுகையில் சட்டவிரோதமாக மணல் எடுப்போர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசின் வழிகாட்டுதல்கள், உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை நடைமுறைப்படுத்த கலெக்டர், டி.ஆர்.ஓ., கனிமவள உதவி இயக்குனருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு விசாரித்தது. அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் செந்தில்குமார், ''அப்பகுதியில் மணல் அள்ளப்படவில்லை. அது 'தோப்பு' என அடையாளம் காணப்பட்டுள்ளது,'' என்றார். நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.