தொலைநிலை கல்வியில் பட்டம்; இட ஒதுக்கீட்டிற்கு எதிராக வழக்கு உயர்நீதிமன்றம் தள்ளுபடி
மதுரை : தமிழக அரசு பணியில் தமிழ் வழியில் படித்தோருக்கான இட ஒதுக்கீட்டை தொலைநிலை கல்வியில் பட்டப் படிப்பு முடித்தோருக்கு வழங்குவதை நிறுத்த தாக்கலான வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது. தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு மகேஸ்வரன், கோவிந்தசாமி தாக்கல் செய்த பொதுநல மனு: தமிழக அரசின் வேலைவாய்ப்புகளில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீதம்இட ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. கல்லுாரிகளில் நேரடியாக தமிழ் வழியில் படித்தவர்களை மட்டுமே 20 சதவீத இட ஒதுக்கீடு பெற அனுமதிக்க வேண்டும். தொலைநிலை கல்வியில் பட்டம் பெற்றவர்கள் இடஒதுக்கீடு பெறுவதை நிறுத்த வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டனர். நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு விசாரித்தது.தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீரா.கதிரவன், 'இது பணியாளர் சம்பந்தப்பட்ட வழக்கு. பொது நல வழக்கல்ல,' என்றார். நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: இது பணியாளர் சம்பந்தப்பட்ட வழக்கு. பொதுநல வழக்காக கருத முடியாது. சம்பந்தப்பட்ட அமைப்பை மனுதாரர்கள் அணுகி நிவாரணம் தேடலாம். மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என உத்தரவிட்டனர்.