கோயில் நந்தவனங்கள் பராமரிக்கப்படுகிறதா உயர்நீதிமன்றம் கேள்வி
மதுரை : கோயில்களுக்கு சொந்தமான நந்தவனங்கள் முறையாக பராமரிக்கப்படுவதாக அறநிலையத்துறை தரப்பு அறிக்கை சமர்ப்பித்ததை ஆய்வு செய்து மனுதாரர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.இந்திய மருத்துவ அறக்கட்டளை மேலாண்மை அறங்காவலர் டாக்டர் ஜெயவெங்கடேஷ் தாக்கல் செய்த பொதுநல மனு:மதுரை, திண்டுக்கல், தேனி, தஞ்சாவூர் உள்ளிட்ட தென்மாவட்ட கோயில்களில் நந்தவனங்கள் இருந்தன. இவற்றின் பெரும்பகுதி வணிகவளாகம், அலுவலகம், வாகனங்கள் நிறுத்துமிடங்களாக மாற்றப்பட்டுள்ளன. குப்பைகள் குவிக்கப்படுகின்றன.கடவுளை வழிபட வரும் பக்தர்களுக்கு நந்தவனங்கள் அமைதி, நறுமணம் தருகின்றன. மருத்துவ குணமுடைய மரங்களிலிருந்து கிடைக்கும் மூலிகைக்காற்று நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்டது. நந்தவனங்களை பாதுகாக்க அறநிலையத்துறை கமிஷனர் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு விசாரித்தது.அறநிலையத்துறை தரப்பு: தென்மாவட்டங்களில் மனுதாரர் குறிப்பிடும் 47 கோயில்களின் நந்தவனங்களில் 90 சதவீதத்தை வேலி அமைத்து முறையாக பராமரிக்கிறோம். சில இடங்களில் ஆக்கிரமிப்புகள் உள்ளன. சில இடங்களில் நந்தவனம் இல்லை. இவ்வாறு அறிக்கை தாக்கல் செய்தது.மனுதாரர் தரப்பு, 'முறையாக பராமரிக்கவில்லை,' என ஆட்சேபித்து போட்டோ ஆதாரங்களை காண்பித்தது.அறநிலையத்துறை அறிக்கையின் அடிப்படையில் நந்தவனங்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என மனுதாரர் தரப்பில் ஆய்வு செய்து ஜன.3 ல் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.