உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கோயில் நிதியில் வணிக வளாகம் அமைக்க தடை கோரி வழக்கு அறிக்கை கோரும் உயர்நீதிமன்றம்

கோயில் நிதியில் வணிக வளாகம் அமைக்க தடை கோரி வழக்கு அறிக்கை கோரும் உயர்நீதிமன்றம்

மதுரை : கோயில்களுக்கு சொந்தமான நிதியிலிருந்து திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள், கல்வி நிறுவனங்கள் அமைக்க தடை கோரிய வழக்கில் அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. திண்டுக்கல் மாவட்டம் பழநி செந்தில்குமார் தாக்கல் செய்த பொதுநல மனு: கோயில்களுக்கு சொந்தமான நிதியிலிருந்து திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள், கல்வி நிறுவனங்கள் அமைக்க அறநிலையத்துறை 2021-22ல் அறிவிப்பு வெளியிட்டது. இது அறநிலையத்துறை சட்டத்திற்கு புறம்பானது. கோயிலின் உபரி நிதியை ஹிந்து மத கொள்கைகளை பரப்புதல், அர்ச்சகர், ஓதுவார் பள்ளிகளை நிறுவுதல், ஹிந்து மதம், தத்துவம் அல்லது சாஸ்திரங்கள் ஆய்வு அல்லது கோயில் கட்டடக்கலை பயிற்றுவிக்கும் பல்கலை அல்லது கல்லுாரியை நிறுவுதல், ஹிந்து குழந்தைகளுக்கான அனாதை இல்லங்கள், பக்தர்களின் நலனிற்காக மருத்துவமனைகள், மருந்தகங்கள் நிறுவ பயன்படுத்த வேண்டும். திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள், கல்வி நிறுவனங்கள் அமைக்கும் அறிவிப்பிற்கு இடைக்காலத் தடை விதித்து ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் அருண்சுவாமிநாதன் ஆஜரானார். அரசு தரப்பு வழக்கறிஞர்: அறிவிப்பின்படி 90 சதவீத கட்டுமான பணி முடிந்துவிட்டது. நீதிபதிகள்: கோயில்களுக்கு ஏழைகள் நன்கொடை அளிக்கின்றனர். அது உங்கள் (அரசு) பணம் அல்ல. அந்நிதி மூலம் ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கலாம். வணிக வளாகம் அமைத்து வியாபாரம் செய்யக்கூடாது. அதற்கு மாற்று வழிமுறைகள் உள்ளன. இது தொடர்பான பிற வழக்குகளுடன் சேர்த்து அடுத்தவாரம் விசாரணைக்கு பட்டியலிட வேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது. நீதிபதிகள், 'இவ்விவகாரத்தில் தற்போதைய நிலை குறித்து அறநிலையத்துறை முதன்மை செயலர், கமிஷனர் அடுத்தவாரம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி