சாலையில் கிடந்த ரூ.17 லட்சம் ஹவாலாவா என விசாரணை
மதுரை: மதுரை மாவட்டம், சிம்மக்கல் திருமலைராயர் படித்துறையை சேர்ந்தவர் செல்வராணி, 50. நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு மீனாட்சி கோவில் கிழக்கு ஆடி வீதியில் இருந்து வீட்டிற்கு நடந்து சென்றார். மீனாட்சி பார்க் - கீழஆவணி மூலவீதி சந்திப்பு அருகே கார் ஒன்றில் இருந்து சாக்குமூட்டை விழுந்தது. அதை கவனிக்காமல் கார் கடந்து சென்றது. இதை கவனித்த செல்வராணி, அந்த மூட்டை அருகே வந்தபோது, காரில் இருந்து விழுந்த வேகத்தில் மூட்டை ஒருபுறம் கிழிந்து, 500 ரூபாய் நோட்டு கட்டுகள் வெளியே தெரிந்தன. அப்போது, அங்கு வந்த ரோந்து போலீசாரிடம், மூட்டை குறித்து செல்வராணி கூறினார். போலீசார், மூட்டையை விளக்குத்துாண் ஸ்டேஷனுக்கு எடுத்து வந்து பார்த்தபோது அதில், 17 லட்சத்து 49,000 ரூபாய் இருந்தது. நேற்று மாலை வரை பணத்திற்கு யாரும் உரிமை கோரவில்லை. இதனால் பணத்தை தவறவிட்டு சென்ற கார் பதிவெண்ணை கண்டறியும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இது ஹவாலா பணமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீசார் விசாரிக்கின்றனர்.