| ADDED : ஜூலை 26, 2011 12:47 AM
மதுரை : மதுரை கலெக்டர் அலுவலகத்தில் ஒவ்வொரு திங்கள் கிழமையும் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடக்கிறது. தற்போதைய கலெக்டர் பாமர மக்களின் மனுக்களையும் பரிவுடன் கவனிப்பதால், முதியோர், விதவைகள், ஆதரவற்றோர், மாற்றுத் திறனாளிகள் என பலரும் மனுக்கள் கொடுக்க குவிகின்றனர். காலை 9 மணி முதல் மதியம் 3 மணிக்கும் மேலாக இந்தக் கூட்டம் நீண்ட வரிசையில் நிற்கிறது. இதனால் குறைதீர் நாள் கூட்ட அரங்கமே நிரம்பி வழிகிறது.
இலவச மனைப்பட்டா, ரேஷன் கார்டு, ஊர்ப்பிரச்னை தொடர்பாக கூட்டம், கூட்டமாக மனுக்களை கொடுக்க வருவோராலும் கூட்டம் அலைமோதுகிறது. குறைதீர் நாள் கூட்டம் நடைபெறும் அரங்கம் அருகிலேயே குடிமை பொருள் வழங்கல் அதிகாரிகளின் 4 அலுவலகங்கள் உள்ளன. சாதாரண நாட்களிலேயே இங்கு வரும் கூட்டம் அதிகமாக இருக்கும். கூட்டம் நடைபெறும் அரங்கமும், குடிமை பொருள் அலுவலகங்களும் அருகருகே உள்ளதால் இப்பகுதி ரோட்டில் தேவையற்ற நெரிசல் ஏற்படுகிறது. அத்துடன் அலுவலகம் அருகே இருசக்கர வாகனங்கள், கார்களை நிறுத்திக் கொள்கின்றனர். அதுபோதாதென்று அந்த குறுகிய பாதையின் ஓரங்களிலேயே பலர் மனுக்கள் எழுதிக் கொடுக்கின்றனர்.
எழுதப் படிக்க தெரியாதோரிடம் படிவங்கள் விற்பது, அவற்றை பூர்த்தி செய்து வழங்குவது இவர்கள் பணி. இவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உள்ளதால் அவர்களைச் சுற்றி கூட்டமும் அமர்ந்து கொள்கிறது. இதனால் மேலும் தேவையற்ற நெருக்கடி ஏற்படுகிறது. திங்கட் கிழமைகளில் இந்த ரோட்டில் நடந்து செல்வதே சிரமமாக உள்ளது. எனவே இப்பகுதியில் மனுக்கள் எழுதுவோரை வேறு இடங்களில் அமரச் செய்வதோடு, வாகனங்களை நிறுத்தவும் வேறு இடங்களை ஒதுக்கலாம்.