| ADDED : பிப் 24, 2024 04:35 AM
திருமங்கலம் : மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே வடக்கம்பட்டி முனியாண்டி சுவாமி கோயில் 89வது ஆண்டு பூஜை விழா நடந்தது. பக்தர்களுக்கு பிரியாணி பிரசாதமாக வழங்கப்பட்டது.தமிழகம் மற்றும் வெளி மாநிலங்கள், நாடுகளில் முனியாண்டி விலாஸ் என்ற பெயரில் ஓட்டல் நடத்தி வருபவர்கள் தங்கள் குடும்பத்துடன் 2 நாட்கள் வடக்கம்பட்டி கிராமத்தில் இக்கோயிலில் ஒன்று கூடி சுவாமி தரிசனம் செய்வர். இதையொட்டி நடந்த நிகழ்ச்சியில் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் தலையில் மலர் தட்டுக்களுடன் கிராம முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்து, வாண வேடிக்கைகள் முழங்க, ஆட்டம், பாட்டத்துடன் முனியாண்டிக்கு மலர் அபிஷேகம் செய்து, தங்களுடைய நேர்த்திக்கடனை நிறைவு செய்தனர்.ஆடு மற்றும் சேவல்களை கோயிலில் காணிக்கையாக அளிப்பர். அவ்வாறு அளிக்கக் கூடிய ஆடு, சேவல்களை கோயில் முன் பலியிட்டு, பின் சமைத்து அதனை பிரியாணியாக தயார் செய்து, அங்கு கூடும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவர். இதன் காரணமாகவே இந்த விழா பிரியாணி திருவிழா என்று அழைக்கப்படுகிறது.