உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தமுக்கத்தில் இயற்கை விளைபொருட்கள் கண்காட்சி

தமுக்கத்தில் இயற்கை விளைபொருட்கள் கண்காட்சி

மதுரை : மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பில் 'மாமதுரை - இயற்கை மதுரை' என்ற தலைப்பில் வேளாண் விளைபொருட்கள், மதிப்புக்கூட்டிய பொருட்களுக்கான விற்பனை கண்காட்சி நேற்று துவங்கியது. கலெக்டர் பிரவீன்குமார் தலைமை வகித்தார். மாநகராட்சி கமிஷனர் சித்ரா, மாவட்ட வன அலுவலர் ரேவ்டி ராமன், துணைமேயர் நாகராஜன் முன்னிலை வகித்தனர். அமைச்சர் மூர்த்தி துவக்கி வைத்து பேசுகையில்,''40 ஆண்டுகளுக்கு முன்பிருந்த, இயற்கை உணவு குறித்த விழிப்புணர்வை இப்போது உணர ஆரம்பித்துள்ளோம். மக்களுக்கு பயன்படக்கூடிய இந்த கண்காட்சியில் பொருட்களை வாங்குவதன் மூலம் விவசாயிகள், சுயஉதவிக் குழுவினர் பயன்பெறுவர். ரசாயன உரங்களின்றி இயற்கையாக தயாரிக்கப்படும் விளைபொருட்களை விற்பதற்காக நிரந்தர சந்தை உருவாக்கப்படும்'' என்றார். பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு இயற்கை பஜாரில் உள்ள அரங்குகளில் பொருட்களை பெறும் வகையில் ரூ.1000 மதிப்புள்ள கூப்பன் வழங்கப்பட்டது. வேளாண் இணை இயக்குநர் முருகேசன், துணை இயக்குநர்கள் சாந்தி, மெர்சி ஜெயராணி (வேளாண் வணிகம்), பிரபா (தோட்டக்கலை) ஏற்பாடுகளை செய்தனர். இயற்கை விவசாயிகளின் பாரம்பரிய அரிசி, சிறுதானியங்கள், கீரை வகைகள், செக்கு எண்ணெய், சிறுதானிய இனிப்பு, கார வகைகள், சூப்கள், காய்கறி நாற்றுகள், விதைகள், பழமரக்கன்றுகள், தோட்டக்கலை அழகுச்செடிகள், மண்புழு உரம், இயற்கை உயிர் உரங்கள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. இன்று (அக். 12) காலை 10:00 முதல் இரவு 9:00 மணி வரை கண்காட்சி நடக்கிறது. அனுமதி இலவசம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி