உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஆக்கிரமிப்பு அகற்ற நோட்டீஸ்: எதிரான வழக்கில் அபராதம் உயர்நீதிமன்றம் உத்தரவு

ஆக்கிரமிப்பு அகற்ற நோட்டீஸ்: எதிரான வழக்கில் அபராதம் உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை: திண்டுக்கல் மாவட்டம் பழநியில் ஆக்கிரமிப்பு அகற்றுவது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பியதற்கு எதிராக தாக்கலான வழக்கில்ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை. பழநி அடிவாரம் மேற்கு கிரி வீதி சந்தானலட்சுமி தாக்கல் செய்த மனு: பழநியில் குறிப்பிட்ட சர்வே எண்ணிலுள்ள சொத்து தொடர்பாக தாசில்தார் அக்.13ல் நோட்டீஸ் அனுப்பினார். அதை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு விசாரித்தது. அரசு வழக்கறிஞர் சாதிக்ராஜா, பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் சார்பில் வழக்கறிஞர் முரளி ஆஜராகினர். நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: ஆர்.டி.ஓ., ஜூன் 13ல் பிறப்பித்த உத்தரவு, தமிழ்நாடு நில ஆக்கிரமிப்புச் சட்டப்படி ஆக.29ல் தாசில்தார் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ஏற்கனவே மனுதாரர் இந்நீதிமன்றத்தில் மனு செய்தார். மனுவை வாபஸ் பெற்றதால், நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஆர்.டி.ஓ., உத்தரவை எதிர்த்து டி.ஆர்.ஓ.,விடம் மேல்முறையீடு செய்யலாம். தாசில்தாரின் உத்தரவிற்கு எதிராக கலெக்டரிடம் மேல்முறையீடு செய்யலாம் என மனுதாரருக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது. தாசில்தாரின் ஆக.29 உத்தரவை எதிர்த்து மனுதாரர் மேல்முறையீடு செய்யவில்லை. மனுதாரர் அதன் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டும். மீண்டும் அதிகாரிகள் நோட்டீஸ் அளித்ததில் விதிமீறல் இல்லை. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. மனுதாரருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கிறோம். தொகையை உயர்நீதிமன்ற சட்டப் பணிகள் ஆணைக்குழுவிற்கு செலுத்த வேண்டும். ஆக.29 ல் தாசில்தார் பிறப்பித்த உத்தரவிற்கு எதிராக மேல்முறையீடு செய்ய மனுதாரருக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி