கொலை செய்யப்பட்ட ஏட்டு உடலை வாங்க மறுத்து மக்கள் மறியல்
உசிலம்பட்டி; மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே கள்ளப்பட்டியைச் சேர்ந்த ஏட்டு முத்துக்குமார், 40, கடந்த 2009ல் போலீஸ் பணியில் சேர்ந்தார். உசிலம்பட்டி இன்ஸ்பெக்டர் டிரைவராக இருந்தவர், நேற்று முன்தினம் நண்பர் ராஜாராம், 31, என்பவருடன், முத்தையம்பட்டி மதுக்கடையில் மது வாங்கி அருகில் உள்ள கடையில் குடிக்க சென்றார். அங்கு தேனி மாவட்ட கஞ்சா வியாபாரி நாவார்பட்டி பொன்வண்ணன் உள்ளிட்ட சிலர் மது அருந்திக் கொண்டிருந்தனர்.பொன்வண்ணன் ஏற்கனவே அறிமுகமானவர் என்பதால், அவருக்கு முத்துக்குமார் அறிவுரை கூறினார். இதுதொடர்பாக, அவருக்கும், பொன்வண்ணன் தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதில், முத்துக்குமார் தாக்கப்பட்டார். இதுகுறித்து, போலீசாருக்கு மொபைல் போனில் முத்துக்குமார் தகவல் தெரிவித்தார். போலீசார் வருவதை அறிந்து தகராறு செய்தவர்கள் டூ - வீலர், மொபைல் போன் உள்ளிட்டவற்றை விட்டு தப்பினர். முத்துக்குமாரை வீட்டிற்கு செல்லுமாறு கூறிவிட்டு, போலீசார் சென்றனர்.பின்னர், முத்துக்குமாரும், ராஜாராமும் அருகில் உள்ள தோட்டத்திற்கு சென்றனர். அவர்களை பின்தொடர்ந்து வந்த கும்பல், இருவரையும் ஆயுதங்களால் தாக்கியது. கீழே விழுந்த முத்துக்குமார் தலையில் கல்லை போட்டுக் கொலை செய்தது. ராஜாராம் படுகாயமடைந்தார். கொலை தொடர்பாக, பொன்வண்ணன் உள்ளிட்டோரை போலீசார் தேடி வருகின்றனர்.இதற்கிடையே, கொலையாளிகளை கைது செய்யவும், நிவாரண நிதி வழங்கவும் வலியுறுத்தி, நேற்று உடலை வாங்க மறுத்து உறவினர்கள், பார்வர்டு பிளாக் கட்சி முன்னாள் எம்.எல்.ஏ., கதிரவன் உள்ளிட்ட அரசியல் கட்சியினர், மூன்று மணி நேரம் மறியலில் ஈடுபட்டனர்.மதுரை எஸ்.பி., அரவிந்த் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சு நடத்தினர். போராட்டத்தை ஒத்திவைத்த உறவினர்கள், கட்சியினர், 'கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் மீண்டும் போராட்டத்தை தொடர்வோம்' என, அறிவித்தனர்.கொலையில் தொடர்புடையவர்கள் தேனி மாவட்டத்தினர் என்பதால், தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.மல்லபுரம் -- மயிலாடும்பாறை மலைச்சாலை சோதனைச் சாவடியில் போலீசார் சோதனையை தீவிரப்படுத்தினர். வருஷநாடு மலைப்பகுதியில் கொலையாளிகள் பதுங்கியிருக்கலாம் என, அப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட வாகனங்களில் போலீசார் தேடி வருகின்றனர்.