விநாயகர் சதுர்த்தியில் புதிய சிலைகளுக்கு அனுமதி இல்லை போலீஸ் கமிஷனர் பேட்டி
மதுரை: ''மதுரை நகரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு புதிய சிலைகள் வைக்க அனுமதி கிடையாது-'' என போலீஸ் கமிஷனர் லோகநாதன் தெரிவித்தார். மதுரை நகரில் அலைபேசி காணாமல் போனதாக புகாரில் ஏற்கனவே ஏப்.,9ம் தேதி ரூ.41.70 லட்சம் மதிப்புள்ள 278 அலைபேசிகள் மீட்கப்பட்டு உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது. நேற்று ரூ.44.85 லட்சம் மதிப்புள்ள 299 அலைபேசிகள் உரியவர்களிடம் கமிஷனர் லோகநாதன் ஒப்படைத்தார். அவர் கூறியதாவது: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கடந்தாண்டு எத்தனை சிலைகள் வைக்க அனுமதி அளிக்கப்பட்டதோ அதற்கு மட்டும் தான் அனுமதி அளிக்கப்படும். இந்தாண்டு புதிதாக சிலைகள் வைக்க அனுமதி கிடையாது. ரோட்டோரத்தில் பராமரிப்பின்றி உள்ள முதியவர்களை காவல் கரங்கள், தன்னார்வ அமைப்புகள் மூலம் மீட்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றனர். இதுவரை 72 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் 50 சதவீதத்திற்கும் மேல் குடும்பத்தினருடன் இணைத்துள்ளோம். சிறுவர்களை பிச்சை எடுக்க வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.