பதவி உயர்வு மூலமே உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் பொதுப்பணித்துறை ஊழியர்கள் வலியுறுத்தல்
மதுரை : 'உதவியாளர் காலிப் பணியிடங்களை பதவி உயர்வு மூலமே நிரப்ப வேண்டும்' என, அரசு பொதுப்பணித்துறை கணக்கு மற்றும் ஆட்சிப்பணியாளர் சங்க மாநில தலைவர் ஆ.செல்வம் கூறியுள்ளார்.அவர் கூறியிருப்பதாவது: நீர்வளத்துறை, பொதுப்பணித்துறையில் 2017 முதல் உதவியாளர் பதவி உயர்வு வழங்கவில்லை. இரு துறைகளிலும் 50 சதவீத உதவியாளர் பணியிடங்களை டி.என்.பி.எஸ்.சி., மூலம் நேரடியாக நிரப்ப வேண்டும் என விதித் திருத்தம் செய்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது. தகுதியுள்ள இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர்கள் 700க்கும் மேற்பட்டோருக்கு பதவி உயர்வு கிடைக்கவில்லை. 450க்கும் மேலான உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. நேரடி நியமனத்தை ரத்து செய்து, பதவி உயர்வு மூலமே அப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்கடந்தகாலங்களில் பட்டயம், பட்டம் (சிவில், மெக்கானிக்கல்) படித்தோருக்கு பதவி உயர்வு மூலம் இளநிலை வரைதொழில் அலுவலர் பதவி உயர்வு வழங்கப்பட்டது. 2020ல் வெளியான அரசாணை 69 ல் பதவி மாற்றம் மூலம் பதவி உயர்வு மறுக்கப்பட்டுள்ளது. இந்த அரசாணையை ரத்து செய்து, 2018 வரை அமலில் இருந்த 'பதவி மாற்றம் மூலம் இளநிலை வரை தொழிலில் அலுவலர் பதவி உயர்வு' என்பதை அனைவரும் பெறும் வகையில் ஆணையிட வேண்டும்பொதுப்பணித்துறை, நீர்வளத்துறையிலும் கலந்தாய்வு மூலம் இடமாறுதல் வழங்க வேண்டும். கோட்டக் கணக்கர் பதவியை நெடுஞ்சாலைத் துறையில் உள்ளது போல் மாநில சேவையாக்க வேண்டும். பொதுப்பணி, நீர்வளத் துறைகளில் நீதிமன்ற வழக்குகள் அதிக அளவில் உள்ளன. இவற்றுக்கு விரைந்து தீர்வு காண மண்டல அலுவலகங்களில் சட்ட அலுவலர்களை நியமிக்க வேண்டும்.இவை போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தியும் நிறைவேறவில்லை. எனவே ஜூலை 29 ல் சென்னை சேப்பாக்கம் முதன்மை தலைமைப் பொறியாளர் அலுவலகம் முன்பு பெருந்திரளாக முறையீடு செய்ய முடிவு செய்யப்படடுள்ளது, என்றார்.