தென்கால் கண்மாயில் நடுமடை சீரமைப்பு * தினமலர் செய்தி எதிரொலி
திருப்பரங்குன்றம்: தினமலர் செய்தி எதிரொலியாக திருப்பரங்குன்றம் தென்கால் கண்மாய் நடுமடைப் பகுதியில் நீர்வளத் துறை மூலம் சீரமைக்கும் பணி துவங்கியது.திருப்பரங்குன்றம் தென்கால் கண்மாய் நடுமடையில் திறக்கப்படும் தண்ணீரால் அவனியாபுரம் வரை 200 ஏக்கருக்கும் மேலான நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. தென்கால் கண்மாய் கரை பைபாஸ் ரோடு ஒட்டிய பகுதியில் வாகன போக்குவரத்துக்காக தார்ச் சாலை பணி நடந்தபோது நடு மடை சேதப்படுத்தப்பட்டது.சாலைப் பணிகள் முடிந்து பல மாதங்கள் ஆகியும் சீரமைக்கவில்லை. நடுமடை வழியாக வெளியேறும் தண்ணீர் மூலம் பாசன வசதி பெறும் பலநுாறு ஏக்கரில் நெற்பயிர்கள் கருக துவங்கின. இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக நீர்வளத் துறை சார்பில் மடைப்பகுதியை சீரமைக்கும் பணி துவங்கியது. நீர்வளத் துறை செயற்பொறியாளர் பாரதிதாசன், உதவி செயற் பொறியாளர் அன்பரசன் ஏற்பாட்டில், உதவி பொறியாளர் சுந்தரமூர்த்தி தலைமையில் பணியாளர்கள் இயந்திரம் மூலம் சீரமைக்கும் பணியை மேற்கொண்டனர்.விவசாயிகள் ராமசாமி, மாயாண்டி கூறியதாவது: சேதமடைந்துள்ள மடைப்பகுதியை நீர்வளத் துறையினர் தற்காலிகமாக சீரமைத்து வருகின்றனர். இருபுறமும் மணல் மூடைகளை அடுக்கி விவசாயத்திற்கு தண்ணீர் திறக்கும் வகையில் பணிகள் மேற்கொண்டுள்ளனர். கண்மாயில் தண்ணீர் குறைந்தபின்பு, நிரந்தர தீர்வாக முன்புபோல் மடைப்பகுதியில் தடுப்புச் சுவர் அமைப்பதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நெற்பயிரை காக்க உதவிய தினமலர் நாளிதழுக்கு நன்றி, என்றனர்.