மழையால் நெற்பயிர்கள் பாதிப்பு
மதுரை: மதுரையில் நேற்று முன் தினம் இரவில் பெய்த தொடர் மழையால் மாவட்டத்தில் பரவலாக 200 ஏக்கர் வரை நெற்பயிர்கள் சாய்ந்தன.வாடிப்பட்டி பகுதியில் 50 ஏக்கர் நெற்பயிர்கள் பாதிப்புக்குள்ளானது. அலங்காநல்லுார் தண்டலை, மணியஞ்சி கிராமத்தில் 60 ஏக்கருக்கு மேல் பாதிக்கப்பட்டதாக விவசாயிகள் வீரணன், பாரதிராஜா தெரிவித்தனர். அவர்கள் கூறுகையில்,'இப்பகுதியில் உள்ள 30 விவசாயிகள் ஆர்.என்.ஆர். சன்னரகம், கோ 51, ஏ.டி.டி., 45 நடுத்தர ரகங்களை பயிரிட்டுள்ளோம்.தொடர் மழையால் தண்டலை, மணியஞ்சி கிராமங்களில் 60 ஏக்கர் பரப்பளவில் நெய்பயிர் முற்றிலும் சேதமடைந்தது. அறுவடைக்கு இன்னும் 10 முதல் 15 நாட்களே உள்ள நிலையில் எங்களால் இந்த இழப்பை தாங்க முடியவில்லை. அரசு கண்டிப்பாக முழுமையான இழப்பு நிவாரணம் வழங்க வேண்டும்' என்றனர்.குலமங்கலம் விவசாயி திருப்பதி கூறுகையில், ''மதுரை மேற்கில் அறுவடைக்கு தயாராக இருந்த 5 விவசாயிகளின் 20 ஏக்கர் நெல் பரப்பு சேதமடைந்துள்ளது. மேலும் நெற்பயிர்கள் சாயாமல் இருந்தாலும் அறுவடை செய்வது கடினம். இதற்கென பல் சக்கரம் பதித்த டிராக்டர் மூலம் அறுவடை செய்ய முடியும். இதற்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.3000 வரை செலவாகும். வைக்கோலும் பயன்படாது. நெல்லை காயவைப்பதற்கு தனியாக செலவாகும். அப்படியே வைத்திருந்தால் நெல்மணிகள் முளைத்து விடும். மொத்தத்தில் மழை பெய்தும் கெடுத்தது'' என்றார்.