நீர்வளத்துறை அதிகாரியிடம் ரூ.1.11 லட்சம் பறிமுதல்
மதுரை : மதுரை நீர்வளத் துறையின் கீழ் திட்டப்பணிகளை செய்யும் ஒப்பந்தக்காரர்களிடம், அதற்குரிய பில் தொகை வழங்க அதிகாரிகள் கட்டாய வசூலில் ஈடுபடுவதாக புகார் எழுந்தது. நேற்று மாலை, தல்லாகுளம் பொதுப்பணித்துறை அலுவலக வளாகத்தில் உள்ள நீர்வளத்துறையில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர். அங்குள்ள, விருந்தினர் இல்ல வரவேற்பறையில் பைல்களை பார்த்துக் கொண்டிருந்த, பெரியாறு வைகை பாசன உபகோட்ட உதவி செயற்பொறியாளர் சையது ஹபீப் என்பவரையும் சோதனையிட்டனர்.அவர் வைத்திருந்த கவரில் இருந்தும், பையில் இருந்தும் கணக்கில் வராத, 1.11 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். அந்த பணம், ஒப்பந்தக்காரர்களிடம் இருந்து லஞ்சமாக பெறப்பட்டதா என, அவரிடம் நேற்றிரவு வரை விசாரணை நடந்தது.