அகற்றிய மரங்களுக்கு ஈடாக மரக்கன்றுகள் நடப்படும் : உயர்நீதிமன்றத்தில் உறுதி
மதுரை: தென்காசி மாவட்டம் காவல்குட்டி வனப்பகுதி அருகே மரங்களை அகற்ற தடை கோரிய வழக்கில்,'அகற்றிய ஒவ்வொரு மரத்திற்கும் ஈடாக தலா 10 மரக்கன்றுகள் நடப்படும்,' என ஒரு நிறுவனம் தரப்பில் உத்தரவாதம் அளித்ததை பதிவு செய்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வழக்கை முடித்து வைத்தது. ஆலங்குளம் அருகே கல்லத்திகுளம் கலா தாக்கல் செய்த பொதுநல மனு: காவல்குட்டி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி அருகே தனிநபர்களுக்கு சொந்தமான 350 ஏக்கர் பட்டா நிலம் இருந்தது. அதை சில நிறுவனங்கள் வாங்கின. ஒரு நிறுவனம் சோலார் பேனல் அமைப்பதற்காக தன்னிச்சையாக நிலத்திலுள்ள மரங்களை அகற்றுகிறது. இதனால் பறவைகளுக்கு பாதிப்பு ஏற்படும். வன விலங்குகள் உணவு பற்றாக்குறையால் விவசாய நிலத்திற்குள் நுழையும். மலைப்பகுதியிலிருந்து வெளியேறும் நீர் கல்லத்திகுளம் ஓடையில் தேங்கும். அதையும் ஆக்கிரமித்து தனியார் நிறுவனம் வேலி அமைத்துள்ளது. மரங்களை வெட்ட தடை விதிக்க வேண்டும். அந்நிலத்தை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியுடன் இணைத்து அரசாணை வெளியிட தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். இதுபோல் மற்றொரு மனு தாக்கலானது. நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு விசாரித்தது. நிறுவனம் தரப்பு,'அகற்றப்பட்ட ஒவ்வொரு மரத்திற்கும் ஈடாக தலா 10 மரக்கன்றுகள் நடப்படும். இப்பணி ஒரு மாதத்தில் நிறைவடையும்,' என உத்தரவாதம் அளித்தது. இதை பதிவு செய்த நீதிபதிகள்,'ஏற்கனவே மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. இதில் மேலும் உத்தரவு பிறப்பிக்கவேண்டிய அவசியம் எழவில்லை. வழக்கு முடிக்கப்படுகிறது,' என உத்தரவிட்டனர்.