உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரப்படுத்த சட்டசபையில் சிறப்பு தீர்மானம் மாநில ஒருங்கிணைப்பாளர் வலியுறுத்தல்

பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரப்படுத்த சட்டசபையில் சிறப்பு தீர்மானம் மாநில ஒருங்கிணைப்பாளர் வலியுறுத்தல்

மதுரை: கல்வித்துறையில் 14 ஆண்டுகளாக பணியாற்றும் பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரப்படுத்தும் வகையில் வரும் சட்டசபை கூட்டத் தொடரில் முதல்வர் ஸ்டாலின் சிறப்பு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என, தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் தெரிவித்தார். அவர் கூறியதாவது: தமிழகத்தில் 2012ம் ஆண்டு முதல் பகுதிநேர ஆசிரியர்கள் தொகுப்பூதியத்தில் பணியாற்றுகின்றனர். 16 ஆயிரம் பேராக இருந்து தற்போது 12 ஆயிரம் ஆசிரியர்களாக குறைந்துவிட்டது. பணிநிரந்தரம் செய்யக்கோரி 14 ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகிறோம். மே மாதம் சம்பளம் இல்லை. போனஸ் வழங்கப்படுவதில்லை. வருங்கால வைப்பு நிதி, மருத்துவ காப்பீடு உள்ளிட்ட எவ்வித அரசு சலுகைகளும் எங்களுக்கு இல்லை. இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு 14 ஆண்டுகளாக போராட்டங்களை நடத்தி வருகிறோம். 2021 சட்டசபை தேர்தலில் 181 வது வாக்குறுதியாக 'பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்' என இடம் பெற்றிருந்தது. ஆனால் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. ராஜஸ்தான், ஒடிசா, பஞ்சாப், டில்லி போன்ற மாநில அரசுகள் தொகுப்பூதியத்தில் பணிபுரிந்த ஒப்பந்த ஆசிரியர்களை காலமுறை சம்பளத்திற்கு மாற்றியுள்ளது. தமிழக அரசும் அதை பின்பற்ற வேண்டும். அடுத்தாண்டு தேர்தல் வரவுள்ளதால், வரும் சட்டசபை கூட்டத்தொடரில் பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரப்படுத்துவதற்கான தீர்மானம் கொண்டுவர முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை