திட்டப்பணிகளுக்கு நியமனம் செய்யாமல் புறக்கணிப்பதால் நிலஅளவையர் வேதனை
மதுரை: அரசு நிர்வாக வசதிக்காக தாலுகாக்கள், குறுவட்டங்களை (பிர்க்கா) பிரிப்பது, நெடுஞ்சாலை, இலவச வீட்டுமனைகளுக்கு நிலம் கையகப்படுத்துதல், நிலம் செட்டில்மென்ட் போன்ற திட்டப் பணிகளுக்கு அரசாணை மூலம் ஊழியர்களை நியமனம் செய்வர். பணிகளைப் பொறுத்து டி.ஆர்.ஓ., முதல் அலுவலக உதவியாளர்கள் வரை நியமனம் செய்கின்றனர். ஆனால் நிலஅளவைத் துறையினரை கண்டு கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. சர்வே துறையினர் புறக்கணிப்பு
சில மாதங்களுக்கு முன் 52 குறுவட்டங்கள் உருவானபோது, கள அலுவலர்கள் (சர்வே அலுவலர்கள்) நியமிக்கப்படவில்லை. செட்டில்மென்ட் பணிகளுக்கும் முதுநிலை வரைவாளர், சார் ஆய்வாளர்கள் அந்தஸ்தில் அலுவலர்கள் நியமிக்கவில்லை. தாலுகாக்கள் புதிதாக உருவான போதும் வட்ட ஆவண வரைவாளர்களை நியமிக்காமல் தவிர்த்துள்ளனர். தேனி உட்பட சில மாவட்டங்களில் பிறப்பித்த அரசாணையில் முதுநிலை வரைவாளர் என்பதற்கு பதிலாக இளநிலை வரைவாளர் என்னும் இல்லாத பணியிடத்தை உருவாக்கியதால் இன்று வரை அவர்கள் முறையான சம்பளம் பெற முடியவில்லை.தமிழ்நாடு நிலஅளவை அலுவலர்கள் சங்க மாநில தலைவர் மகேந்திரகுமார் கூறியதாவது: ஜூலை 9ல் கன்னியாகுமரி அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் 6 கிராமங்களுக்கு செட்டில்மென்ட் செய்து, பட்டா வழங்க பிறப்பித்த அரசாணையில், 2 தாசில்தார், 4 வருவாய் ஆய்வாளர் மற்றும் டைப்பிஸ்ட், புலஉதவியாளர் பணியிடங்கள் அவுட்சோர்ஸிங் முறையில் நியமிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பணிச்சுமை, மனஉளைச்சல்
ஆயினும் இப்பணிக்கு உதவிசெய்யும் நிலஅளவை, பதிவேடுகள் துறையின் சார் ஆய்வாளர்கள், முதுநிலை வரைவாளர்கள் பணியிடத்தை உருவாக்காமல் உத்தரவிட்டுள்ளனர். முதல்வர் ஸ்டாலின் பட்டாக்கள் வழங்கி வருகிறார். இதற்கு களப்பணியாளர்கள், தொழில்நுட்ப பணியாளர்களை புதிதாக உருவாக்காமல், மாவட்டத்தில் உள்ளவர்களை பயன்படுத்துவதால் கூடுதல் பணிச்சுமை, மனஉளைச்சல் ஏற்படுகிறது. புதிய பணிகளுக்கு தேவையான களப்பணியாளர் உருவாக்கி அரசாணை வெளியிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.