உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / விவசாய பம்ப்செட், பைப்களை மறந்த மத்திய அரசு ஜி.எஸ்.டி., வரி சீரமைப்பில் 18 சதவீதமே தொடர்கிறது

விவசாய பம்ப்செட், பைப்களை மறந்த மத்திய அரசு ஜி.எஸ்.டி., வரி சீரமைப்பில் 18 சதவீதமே தொடர்கிறது

மதுரை: 'ஜி.எஸ்.டி., வரி சீரமைப்பின் போது விவசாய பம்ப்செட்கள், அதற்கான குழாய்களை மத்திய அரசு கணக்கெடுக்காததால் தற்போது வரை 18 சதவீத வரி விதிக்கப்படுகிறது. அதை 5 சதவீதமாக குறைக்க வேண்டும்,' என, பாரதிய கிசான் சங்கத்தினர் தெரிவித்தனர். மதுரையில் சங்க அகில இந்திய தலைவர் சாய் ரெட்டி, துணைத்தலைவர் பெருமாள் கூறியதாவது: வேளாண் பண்ணைக் கருவிகள், உரம், பூச்சிக்கொல்லி, விவசாய மோட்டார் பம்ப்செட், அதற்கான குழாய்களுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி., வரி விதிக்கப்பட்டது. விவசாயிகளின் தொடர் கோரிக்கையால் வரி சீரமைப்பின் போது 5 சதவீதம் வரியாக குறைக்கப்பட்டது. ஆனால் வேளாண் பம்ப்செட், பைப்புகளை மத்திய அரசு மறந்து விட்டதால் 18 சதவீத வரியே நீடிக்கிறது. அதை ஐந்து சதவீத வரியாக குறைக்க வேண்டும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதியுள்ளோம். குறு, சிறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு மூன்று முறை ரூ.2000 வீதம் ரூ.6000 மத்திய அரசு ஊக்கத்தொகையாக வழங்குகிறது. ஏழாண்டுகளாக விவசாய கருவிகளுக்கு அதிக வரி விதித்து எங்களை நஷ்டப்படுத்தியதால் அதை ஈடுகட்டும் வகையில் ஊக்கத்தொகையாக மாதம் ரூ.2000 வழங்க வேண்டும். தேங்காய் எண்ணெய், மரவள்ளிக்கிழங்கை உணவுப்பொருட்கள் பட்டியலில் மத்திய அரசு சேர்க்கவில்லை. இதனால் விற்பனை செய்யும் போது 5 சதவீதம் ஜி.எஸ்.டி., வரி செலுத்துகிறோம். இவற்றை உணவுப்பொருட்கள் பட்டியலில் சேர்த்தால் தான் விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கும். முன்மாதிரி தெலுங்கானா தமிழகத்தில் 1968 விவசாயிகள் கடன் உட்பட பல்வேறு சூழ்நிலைகளில் இறந்துள்ளனர். இந்தியாவைப் பொறுத்தவரை விவசாயிகள் இறப்பில் தமிழகம் 4ம் இடத்தில் உள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் அனைத்து விவசாயிகளுக்கும் இன்சூரன்ஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. தற்கொலையோ, இயற்கையோ எந்த சூழ்நிலையில் விவசாயி இறந்தாலும் அவரது குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் இழப்பீட்டை இன்சூரன்ஸ் நிறுவனங்கள் வழங்குகின்றன. அதற்கான பிரீமியம் தொகையை வழங்குகிறது தெலுங்கானா அரசு. விவசாயத்திற்கு 24 மணி நேரமும் தடையற்ற இலவச மின்சாரத்தை வழங்குகிறது. ஏமாற்றிய தமிழக அரசு பீமா பஜல் யோஜனா பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இரண்டாண்டுகளுக்கு முன் வரை தமிழக அரசு விவசாயிகளிடம் பிரீமியத் தொகையை வசூலித்தது. அந்தத் தொகையை இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு தமிழக அரசு வழங்காததால் புயல், பேரிடர் நிகழ்வுகளில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இழப்பீட்டுத்தொகை வழங்கவில்லை. அரசின் இந்த அணுகுமுறையால் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்யவே தயங்குகின்றனர் என்றனர். மாநில தலைவர் பார்த்தசாரதி, மாநில செயற் குழு உறுப்பினர் பாலசுப்ரமணியன் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை