மருத்துவ வசதி இன்றி தவிக்கும் பொதுமக்கள்
சோழவந்தான் : திருவேடகத்தில் போதிய மருத்துவ வசதியின்றி பொது மக்கள் சிரமப்படுகின்றனர். அப்பகுதி பாண்டிச்செல்வி கூறியதாவது: திருவேடகம், தச்சம்பத்து, திருவேடகம் காலனி பகுதிகளில் 5 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்குள்ள துணை சுகாதார நிலையம் சேதமடைந்த கட்டடத்தில் செயல்படுகிறது. வாரம் ஒருமுறை மேலக்கால் ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் வந்து மருத்துவம் பார்த்துச் செல்கின்றனர். மற்ற நாட்களில் நோயாளிகள் 5 கி.மீ., தொலைவில் உள்ள சோழவந்தான் அரசு மருத்துவமனை, மேலக்கால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்ல வேண்டியுள்ளது. அருகில் தனியார் மருத்துவமனைகளும் இல்லாததால் மிகுந்த சிரமப்படுகிறோம். அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புதிய கட்டடம் கட்டித் தரவேண்டும் என்றார்.