தினமலர் செய்தியால் சரியான இணையதளம்
பேரையூர்: புதிய விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய இணைய தளம் ஏற்றுக் கொண்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இதுவரை பயிர் காப்பீடு செய்யாத விவசாயிகள், தற்போது காப்பீடு செய்ய முடியாமல் அலைக்கழிக்கப்படுவது குறித்து தினமலர் நாளிதழில் நேற்று செய்தி வெளியானது. இதையடுத்து உடனடியாக இணையதளம் சரி செய்யப்பட்டது. சொந்த நிலம், குத்தகை நிலம் உள்ளவர்கள் சிட்டா, அடங்கல் வங்கி கணக்கு புத்தகம், ஆதார் அட்டை கொண்டு பொதுச் சேவை மையம் மூலம் காப்பீடு செய்யலாம். தற்போது ரபி பருவத்தில் மதுரை, பிற மாவட்டங்களில் மக்காச்சோளம், சோளம், பருத்தி, நெல் பயிர்களுக்கு காப்பீடு செய்ய வேளாண் துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர். கடந்தாண்டு காப்பீடு செய்த விவசாயிகள் மட்டும் தற்போது காப்பீடு செய்ய முடிந்தது. புதிய விவசாயிகள். கடந்தாண்டு காப்பீடு செய்யாத விவசாயிகளால் தற்போது மீண்டும் காப்பீடு செய்ய முடியவில்லை. புதிய விவசாயிகள், இதுவரை காப்பீடு செய்யாத விவசாயிகள் சிட்டா மற்றும் வி.ஏ.ஓ.,விடம் சென்று அடங்கல் வாங்கி பொது சேவை மையம் சென்று பதிய முடியாமல் சில நாட்களாக அலைந்து திரிந்தனர். இணையதளம் சரியானதை அடுத்து நேற்று முதல் அனைத்து விவசாயிகளும் பயிர் காப்பீடு செய்தனர். இதனால் மகிழ்ந்த விவசாயிகள் தினமலர் இதழுக்கு நன்றி தெரிவித்தனர்.