கள்ளழகர் பல்லக்கை சோதிக்கும் கல்மண்டபத்திற்கு சோதனை
மதுரை : மதுரை தல்லாகுளம் பகுதியில் கள்ளழகர் வருகையின்போது பயன்படுத்தப்படும் 'கூட்டுக்குள் கூடு' கொடுத்து வாங்கும் மண்டபத்திற்கு மாற்று இடம் அளிக்க வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.போக்குவரத்து நெரிசலை தீர்க்க கோரிப்பாளையம் பகுதியில் பாலப்பணி நடக்கிறது. 60 சதவீத பணிகள் முடிந்த நிலையில் சர்வீஸ் ரோடுக்காக இடங்களை கையகப்படுத்தும் பணியும் முடிந்து கட்டுமானங்களை அகற்றும் பணி நடக்கிறது. தமுக்கம் பகுதியில் துவங்கும் இப்பாலத்தில் தல்லாகுளம், மாநகராட்சி வரையான ரோடும் அகலப்படுத்தப்படுகிறது. இதற்காக ரோட்டின் கிழக்கு பகுதியில் ரோட்டோர கடைகள் அகற்றப்பட்டு, மழைநீர் வடிகால் அமைப்பு கட்டப்பட்டு வருகிறது. இதில் தல்லாகுளம் பெருமாள் கோயில் பின்பகுதியில் ரோட்டின் மேல் நான்கு கால் கல்மண்டபம் ஒன்று உள்ளது.இதன் பின்னணி குறித்து ஆரப்பாளையம் நாக சீனிவாசன் கூறியதாவது: அழகர் வரும் பல்லக்கு இந்த மண்டபத்தினுள் நுழைந்து வெளியேறி பெருமாள் கோயில் செல்லும். பல்லக்கு நெகிழ்ந்து போகாமல் கச்சிதமாக உள்ளதா என அறிய இம்மண்டபம் பயன்பட்டது. மண்டபத்தில் நுழைந்து வெளியேறும் போது இடிபடாமல் பல்லக்கு வெளியேறினால் கச்சிதமாக உள்ளது என்று பொருள். இதற்காகவே கட்டப்பட்ட மண்டபம் ஆறேழு ஆண்டுகளுக்கு முன்வரை பயன்பாட்டில் இருந்தது. பிளாட்பார்ம் உயர்ந்ததால் நின்று போனது. தற்போது ரோடு விரிவாக்கத்திற்காக இதனை அகற்ற திட்டமிட்டுள்ளனர். இறையும், கலையும் இணைந்த மதுரையில் இதுபோன்ற அடையாளங்களை மறைக்கக்கூடாது. இதன் அருகிலேயே இதற்கு தனிஇடம் ஒதுக்கித்தர வேண்டும் என்றார்.