மீனாட்சி திருக்கல்யாணத்தில் பங்கேற்க திருப்பரங்குன்றம் சுவாமிகள் புறப்பாடு
திருப்பரங்குன்றம்: பெற்றோர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடனும், தாரை வார்த்துக் கொடுக்க பவளக்கனிவாய் பெருமாளும் நேற்று திருப்பரங்குன்றம் கோயிலில் இருந்து புறப்பட்டனர்.மீனாட்சி சுந்தரரேஸ்வர் திருக்கல்யாணம் இன்று நடக்கிறது. அதில் பங்கேற்க திருப்பரங்குன்றம் கோயிலில் இருந்து சுப்பிரமணிய சுவாமி தெய்வானை, பவளக்கனிவாய் பெருமாள் நேற்று மாலை பறப்பட்டனர். இன்று அதிகாலை மீனாட்சி அம்மன் கோயிலில் எழுந்தருளுவர். மீனாட்சி சுந்தரேஸ்வர், பிரியாவிடை, சித்திரை வீதிகளில் பட்டின பிரவேசம் முடிந்து, கோயிலுக்குள் ஊஞ்சல் மண்டபத்தில் சந்திப்பு நிகழ்ச்சி நடக்கும்.பெற்றோர் திருக்கல்யாணத்தில் பங்கேற்று, மே 10ல் மதுரை சுவாமிகளிடம், திருப்பரங்குன்றம் சுவாமிகள் விடைபெறுவர்.மே 11 காலை சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை மதுரை கோயிலில் இருந்து புறப்பாடாகி, தெற்காவணிமூல வீதியிலுள்ள மண்டபத்தில் எழுந்தருளுவர். மாலையில் பூப்பல்லக்கில் புறப்பாடாகி, பவளக்கனிவாய் பெருமாளை அழைத்துக் கொண்டு திருப்பரங்குன்றம் கோயில் திரும்புவர். இந்நாட்களில் திருப்பரங்குன்றம் கோயில் வழக்கம் போல் திறக்கப்பட்டிருக்கும்.