உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கிராமப்புறச் சாலைகள் மேம்பாடுக்கு இ மார்க் செயலி குறித்த பயிற்சி

கிராமப்புறச் சாலைகள் மேம்பாடுக்கு இ மார்க் செயலி குறித்த பயிற்சி

மதுரை: மதுரையில் மத்திய அரசின் 'பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா' திட்டத்தின் கீழ் கிராமப்புற மேம்பாட்டுக்காக, சாலைகள் அமைக்கப்படுகின்றன. ஊரக வளர்ச்சித்துறை சார்பில் ஒன்றிய அதிகாரிகள் இத்திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர். கிராமங்களுக்கு இடையே அமையும் இந்த சாலைகள் மேம்பாடு குறித்தும், அடுத்த ஐந்தாண்டுகளுக்கு பராமரிப்பது குறித்தும் மாநில அளவிலான பயிற்சி பட்டறை மதுரையில் நேற்று துவங்கியது.தேசிய, மாநில கிராமப்புறச் சாலைகள் கட்டுமான முகமைகள், ஊரக வளர்ச்சித்துறை ஆகியவை சார்பில் நடந்த நிகழ்ச்சியில் 38 மாவட்டங்களின் திட்ட அலுவலர்கள், செயற்பொறியாளர்கள், உதவி செயற் பொறியாளர்கள், ஒப்பந்ததாரர்கள் பங்கேற்றனர். பயிற்சியை கலெக்டர் சங்கீதா துவக்கி வைத்தார்.அவர் பேசியதாவது: பிரதமரின் கிராமப்புறச் சாலைகள் திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழகம் முன்னோடி மாநிலமாக உள்ளது. அதிலும் மதுரை மாவட்டம் இதில் முன்னணியில் உள்ளது. இத்திட்டம் 3 தொகுப்புகளாக செயல்படுத்தப்படுகிறது. இவற்றில் முதல் இரண்டு தொகுப்பு பணிகளையும் மதுரை மாவட்டம் முடித்துவிட்டது. இறுதி தொகுப்பிலும் 70 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன. நிலுவையில் உள்ள அப்பணிகளும் விரைவில் முடிக்கப்படும்'' என்றார்.இதையடுத்து நடந்த ரோடுகள் பராமரிப்பு பயிற்சியில் 'தேசிய சாலை கட்டமைப்பு வளர்ச்சி முகமையின் இணை டைரக்டர் ஜெனரல் பிரதீப்அகர்வால், 'இ மார்க்' என்ற செயலி குறித்து பேசினார். கிராமப்புறச் சாலைகளை அமைப்பதற்கும், பராமரிப்பதற்கும் மதிப்பீடு செய்து நிதிஒதுக்கி, கட்டமைத்தபின், அதனை தொடர்ந்து கண்காணிக்கவும் வேண்டும். 'இ மார்க் செயலி' உதவும். ரோடு பணிகளை 5 ஆண்டுகளுக்கு கண்காணித்து ஒவ்வொரு கட்டத்திலும் படங்களுடன் பதிவிட வேண்டும். இதன்மூலம் சாலை, கிராமங்களும் மேம்பாடு பெறும் என்று விளக்கினார்.மாநில தலைமை பொறியாளர் சேதுராமன், கண்காணிப்பு பொறியாளர் குற்றாலிங்கம் உட்பட பலர் பங்கேற்றனர். ஜன.5 வரை நடக்கும் பயிற்சியில், இறுதி நாளில் களஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ