பெஞ்சல் புயல் பாதிப்பு புள்ளிவிபரத்தில் முரண்பாடு உதயகுமார் குற்றச்சாட்டு
மதுரை: ''மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னமும் முழுமையாக நிவாரணம் கிடைக்கவில்லை. பெஞ்சல் புயல் பாதிப்பு ஆய்வில் மத்திய, மாநில அரசுகளின் புள்ளி விபரத்தில் முரண்பாடு உள்ளது'' என சட்டசபை எதிர்க்கட்சி துணைத் தலைவர் உதயகுமார் கூறினார்.மதுரையில் நேற்று அவர் கூறியதாவது: தமிழ்நாட்டில் 2011ல் தானே புயல், 2012ல் நீலம், 2013ல் மடி, 2016 வர்தா, 2017 ஒக்கி, 2018 கஜா, 2019 பனி, 2020 நிவர் புயல்களையும், அதேபோல் சுனாமியையும் ஜெயலலிதாவும், பழனிசாமியும் எதிர்கொண்டு மக்களை பாதுகாத்தார்கள். ஆனால் கடந்த ஆண்டு டிசம்பரில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் முழுமையாக நிவாரணம் கிடைக்கவில்லை.அதேபோல் பெஞ்சல் புயல் 14 மாவட்டங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. மத்திய அரசு ஆய்வு செய்ததில் சேகரித்த புள்ளி விபரமும், தி.மு.க., அரசு அளித்த புள்ளிவிபரமும் முரண்பாடாக உள்ளன. இதன்மூலம் தமிழகத்திற்கு நிவாரணம் முழுமையாக கிடைக்காமல் போகக்கூடிய ஒரு சூழ்நிலைக்கு இந்த தி.மு.க., அரசு காரணமாக அமைந்துவிடும் போல உள்ளது.பழனிசாமி ஆட்சியில் குடிமராமத்து திட்டத்தை செயல்படுத்தி தமிழகத்தில் நீர் மேலாண்மை புரட்சி படைத்தார். ஆனால் அத்திட்டத்தை அரசியல் காழ்ப்புணர்ச்சியால் மூடு விழா நடத்திவிட்டதால் அனைத்து ஏரிகளும் பாசன கால்வாய்களும் உடைந்து நீர் வெளியேறுவதற்கு காரணமாகி விட்டது. இப்போது காக்க தவறிய தி.மு.க., அரசு மற்றொரு புயலை எப்படி எதிர்கொள்ள ஆயத்தமாகப் போகிறது.இவ்வாறு கூறினார்.