உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை மாநிலத்தில் அமல்படுத்த வலியுறுத்தல்

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை மாநிலத்தில் அமல்படுத்த வலியுறுத்தல்

மதுரை : மதுரையில் தமிழ்நாடு அரசு ஆசிரியர்கள், மகளிர் ஊர் நல அலுவலர், மேற்பார்வையாளர்கள் சங்க கூட்டம் மாவட்ட தலைவர் அப்துல்லத்திப் கான் தலைமையில் நடந்தது.மேற்பார்வையாளர் கணேஷ்வரி, செயலாளர் ஜெயராஜ் பங்கேற்றனர். மாநில தலைவர் சங்கர் பாபு தீர்மானங்களை நிறைவேற்றி பேசியதாவது: 'அரசு பழைய ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டு வந்தால் 6 லட்சம் ஊழியர்களுக்கு அமல்படுத்த வேண்டும்' என சொல்கிறது. நாங்கள் முன்பே பணி நிரந்தரம் பெற்றவர்கள். நீதிமன்றத்தை நாடி 6 ஊழியர்களுக்கு மட்டும் இத்திட்டத்தை வாங்கி விட்டோம். தற்போதும் வழக்கு நடக்கிறது.பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த ஊர்வலம், பிரசாரம், உண்ணாவிரதம், மாநாடு, மறியல் போராட்டங்கள் மூலம் தமிழக அரசுக்கு தெரியப்படுத்துகிறோம். 2026 தேர்தல் வருவதால் 2025 ஆண்டு பட்ஜெட்டில் சங்க தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வேண்டும்.மத்திய அரசு ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என அறிக்கை வெளியிட்டது. அதனை பல மாநிலங்கள் நிறைவேற்றி விட்டன. அதன்படி 23 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பயனடைவர். பணிக் காலத்தில் இறந்து விட்டால் 18 சதவீதம் ஓய்வூதியம் கிடைக்கும். குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணிபுரிந்தவர்களுக்கு ரூ.10ஆயிரம் வழங்க வேண்டும் என உள்ளது. இத்திட்டத்தை தமிழக அரசு கொண்டுவர வேண்டும். எங்களுக்கு குறைந்தபட்சமாக ரூ.10ஆயிரம், மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும். மத்திய அரசுடன், மாநில அரசு ஊழியர்கள் பெறும் ஓய்வூதியத்தை கணக்கிட்டால் எங்களுக்கு மிகக்குறைவாக உள்ளது. கோவையில் கலைஞர் நுாலகம் கட்ட நிதி இருக்கிறது. கள்ளச்சாராயத்தில் இறந்தவர்களுக்கு ரூ.10லட்சம் இழப்பீடு வழங்க அரசிடம் நிதி இருக்கிறது. எங்களைப் போன்ற அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதற்கு நிதி இல்லை என ஒதுக்குவது கொடுமையானது. தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தபடி பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும். இதற்காக 2025 மார்ச்சில் சென்னை சமூகநலத்துறை ஆணையாளர் அலுவலகத்தை முற்றுகையிடுவோம். இவ்வாறு பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ