வாகன ஆய்வாளர்கள் இடமாற்றம் பதிவு, உரிமம் வழங்குவதில் சிக்கல் 5 பேர் பணியாற்றிய இடத்தில் ஆள் இல்லை
மதுரை : மதுரை வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் (ஆர்.டி.ஓ.,) வாகன ஆய்வாளர்கள் இடமாற்றத்தால் வாகன பதிவு பணிகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.மதுரை நகரில் தெற்கு, வடக்கு, மத்தி என 3 ஆர்.டி.ஓ., அலுவலகங்கள் உள்ளன. மதுரை தெற்கு, வடக்கு அலுவலகங்களில் தலா 5, மத்தியில் 3 வாகன ஆய்வாளர்கள் இதனை கவனித்து வந்தனர். சமீபகாலமாக தலா ஒரு வாகன ஆய்வாளரே இருந்ததால் அவர்கள் விடுப்பு எடுப்பது மட்டுமின்றி தினசரி அலுவல்கள் சிரமத்துடன் நடந்தன.இந்நிலையில் மூன்று வாகன ஆய்வாளர்களில் மதுரை வடக்கில் பணியாற்றிய முரளிதரன் மேலுார் யூனிட் அலுவலகத்திற்கு மாற்றப்பட்டார். அங்கிருந்த சரவணகுமார் காத்திருப்போர் பட்டியலில் உள்ளார். வாடிப்பட்டி யூனிட் அலுவலகத்தில் பணியாற்றிய அனிதா காரைக்குடிக்கும், அமலாக்க பிரிவில் பணியாற்றிய மற்றொரு அனிதா கோவைக்கும் இடமாற்றப்பட்டனர்.இதில் முரளிதரன் மேலுார், வாடிப்பட்டி யூனிட் அலுவலகங்களை வாரத்தில் 2 அல்லது 3 நாட்கள் கவனிப்பார். இதனால் மதுரை வடக்கு அலுவலகத்திற்கு மட்டும் வாகன ஆய்வாளரே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த அலுவலகத்திற்கு தினமும் பலநுாறு பேர் உரிமம், பதிவுக்காக வந்து செல்கின்றனர். இத்துடன் அவ்வப்போது வாகன சோதனை, விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்த வேண்டும். 5 பேர் பணியிடத்தில் ஒருவர் கூட இல்லாத நிலையில் தினமும் வரும் பொதுமக்களை எப்படி சமாளிப்பது என அதிகாரிகள் திகைப்பில் உள்ளனர்.