விலை இருக்கும் நேரம் விளைச்சல் இல்லையே
பேரையூர்: பேரையூர் பகுதியில் எலுமிச்சை விளைச்சல் குறைந்ததால் விலை உயர்ந்துள்ளது. பேரையூர் தும்மநாயக்கன்பட்டி, எஸ். கீழப்பட்டி, சந்தையூர், சாப்டூர் பகுதிகளில் நுாற்றுக்கணக்கான ஏக்கரில் எலுமிச்சை சாகுபடி நடக்கிறது. இப்பகுதியில் விளையும் எலுமிச்சை உள்ளூர் விற்பனை போக, மதுரை மார்க்கெட்டுக்கு கொண்டு சென்று வேறு மாவட்டங்களுக்கும் அனுப்பப்படுகின்றன. கடந்த வாரம் பெய்த மழையால் எலுமிச்சையில் இருந்த பூக்கள், பிஞ்சுகள் உதிர்ந்தன. இதனால் விளைச்சல் பாதித்தது. செப்., மாதம் ஒரு கிலோ எலுமிச்சை ரூ.50 க்கு விற்றது. தற்போது கிலோ ரூ.150க்கு விற்பனை செய்யப்படுகிறது. விலை இருந்தும் விளைச்சல் இல்லையே என விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.