காப்பீட்டு திட்டத்தில் சித்த மருத்துவத்தை சேர்க்காதது ஏன்
மதுரை: அலோபதி மருத்துவத்திற்கு கோடி கோடியாய் செலவிடும், முதல்வரின் இலவச காப்பீட்டுத் திட்டத்தில் கூட சித்த மருத்துவத்தை சேர்க்காமல் தமிழக அரசு ஏமாற்றுகிறது.சோரியாசிஸ், வெண்படை, வயிற்றுப்புண் நோய், ஆரம்பகட்ட புற்றுநோய், சைனஸ் நோய், ஆரம்பகட்ட கண்புரை நோய், மூட்டு விலகல், சவ்வு கிழிதல், எலும்பு முறிவு, சிறுநீரக கற்கள், பித்தப்பை கற்கள், மூலம், பவுத்திரம், ரத்தக்குழாய் அடைப்புக்கு அலோபதி முறையில் அறுவை சிகிச்சை தேவைப்படலாம். ஆனால் இந்நோய்களுக்கு அறுவை சிகிச்சை செய்யாமல் சித்த மருத்துவத்தில் சிகிச்சை அளிக்க முடியும்.மாநில அரசின் இலவச காப்பீட்டு திட்டத்தில் சித்த மருத்துவத்தை சேர்க்காததால் மத்திய அரசின் ஆரோக்கிய யோஜனா (பி.எம்.ஜெ.ஏ.ஒய்.) மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திலும் சித்த மருத்துவம் சேர்க்கப்படவில்லை. அலோபதி சிகிச்சைக்கு மாற்று விரும்புவோர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளில் புறநோயாளியாக சிகிச்சை பெறுகின்றனர். அல்லது தனியார் மருத்துவக்கல்லுாரி மற்றும் மருத்துவமனைகளில் கட்டண சிகிச்சை மேற்கொள்கின்றனர். சித்த மருத்துவ சிகிச்சையை விரும்பும் ஏழை, நடுத்தர வர்க்கத்தினர் இலவச காப்பீட்டுத் திட்டத்தில் பயன்பெற முடியவில்லை.தமிழகத்தில் மத்திய அரசின் என்.ஏ.பி.எச்., தரச்சான்று பெற்ற மத்திய அரசு மருத்துவமனை, 5 தனியார் சித்தா மருத்துவமனைகள், 16 அரசு மற்றும் தனியார் சித்த மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைகள் செயல்படுகின்றன.பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் சித்த மருத்துவ பிரிவு செயல்பட்டாலும் போதிய இடவசதி செய்யவில்லை. இதற்கென 30 படுக்கைகளுடன் கூடிய சித்த மருத்துவ பிரிவை துவக்கினால் வெளிமாவட்டங்களில் இருந்து வரும் நோயாளிகள் தங்கி சிகிச்சை பெறமுடியும். மேலும் 60க்கும் மேற்பட்ட ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி, யோகா, நேச்சுரோபதி மருத்துவமனைகள் உள்ளன. மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தில் இந்த 5 பிரிவுகளும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.எனவே தமிழக அரசும் காப்பீட்டுத் திட்டத்தில் உள்நோயாளியாக தங்கி சிகிச்சை பெறும் வகையில் அனைத்து பிரிவுகளையும் சேர்க்க வேண்டும். அதன் மூலம் மத்திய அரசின் காப்பீட்டுத்திட்டத்தில் ஆயுஷ் பிரிவு சிகிச்சைகளை சேர்க்க வலியுறுத்த வேண்டும்.