உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சாலை பாதுகாப்பு விழா நடத்துவதில் கடந்தாண்டை போல் போக்குவரத்து அலுவலர், ஆய்வாளர்கள் நியமிக்கப்படுவார்களா

சாலை பாதுகாப்பு விழா நடத்துவதில் கடந்தாண்டை போல் போக்குவரத்து அலுவலர், ஆய்வாளர்கள் நியமிக்கப்படுவார்களா

ஆண்டுதோறும் ஜனவரி யில் சாலைப் பாதுகாப்பு வாரவிழா நடக்கிறது. இதில் போக்குவரத்து விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை போலீசார், மருத்துவத்துறை, நெடுஞ்சாலை என பிறதுறைகளுடன் இணைந்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஏற்பாடு செய்வர். 2 ஆண்டுகளாக இவ்விழாவை மாத விழாவாக நடத்தி வருகின்றனர்.இந்தாண்டு மத்திய அரசு ஜன.1 முதல் 31 வரை நடத்துவதாக அறிவித்த நிலையில் தமிழக அரசு இன்னும் அறிவிப்பை வெளியிட வில்லை. கடந்த ஆண்டு இந்த விழாவை தாமதமாக ஜன.13 முதல் பிப்.12 வரை நடத்தியது. இதற்கான நிதி, போதுமான ஊழியர்கள் இல்லாததால் நிகழ்ச்சிகள் சொதப்பலாக நடந்தேறின. இந்தாண்டும் அதே நிலை தொடர்கிறது. போதாக்குறைக்கு ஊழியர்கள் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. மதுரை மாவட்டத்தில் 3 ஆர்.டி.ஓ., அலுவலகங்கள், 4 பிரிவு (யூனிட்) அலுவலகங்கள் உள்ளன. இவற்றில் 2 ஆர்.டி.ஓ.,க்களே உள்ளனர். தெற்கு ஆர்.டி.ஓ., தேனி மாவட்டத்தையும் கவனிக்கிறார். மதுரை மத்திய ஆர்.டி.ஓ., மதுரை வடக்கு அலுவலகத்தை கூடுதலாக கவனிக்கிறார். மதுரையில் தினமும் வாகனங்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில் அதிக வேலைப்பளு அவர்களுக்கு உள்ளது. அதேசமயம் அவர்களுக்கு உதவியாக இருக்கும் வாகன ஆய்வாளர்கள் எண்ணிக்கையோ மிகவும் குறைவு.மதுரை வடக்கு அலுவலகத்தில் வாகன ஆய்வாளர்கள் 5 பேர், மத்தியில் 3 பேர், தெற்கில் 5 பேர் இருக்க வேண்டும். ஆனால் மூன்றிலும் தலா ஒருவரே உள்ளார். எனவே ஆய்வாளர்கள் விடுப்பு எடுக்க கூட முடியாமல் பணியில் உள்ளனர். பதிவு, தகுதிச்சான்று பணிகள் என பலவும் உள்ளதால் வாகன சோதனை, ஆய்வு போன்ற பணிகளைக்கூட செய்ய இயலவில்லை.ஆர்.டி.ஓ.,க்களைப் பொறுத்தவரை பணிகளிடையே வழக்குகள், விசாரணை என கோர்ட், கலெக்டர் அலுவலகங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது. இந்த அலுவலர்களால்தான் பள்ளி, கல்லுாரி என களத்தில் இறங்கி 'ஸ்பான்சர்களை' ஏற்பாடு செய்து சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும். அலுவலகத்திற்கு ஒருவரே உள்ளதால் எதையும் செய்ய இயலாமல் தவிக்கின்றனர். மாநில அளவில் ஆர்.டி.ஓ.,க்கள், வாகன ஆய்வாளர்கள் பணியிடங்கள் பலவும் காலியாக உள்ளன. அவற்றை நிரப்பினால்தான் வழக்கமான பணிகளுடன், விழிப்புணர்வு பணிகளையும் மேற்கொள்ள முடியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை