நாகை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மீனவர்கள் சாலை மறியலால் பரபரப்பு
நாகப்பட்டினம்: நாகை, நம்பியார் நகர் மீனவர்கள்,அடிப்படை வசதி கோரி, கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நாகை, நம்பியார் நகரில் 1350 மீனவ குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். சுனாமியால் பாதித்த இவர்களுக்கு நகராட்சி அலுவலகம் எதிரில் வீடுகள் கட்டித்தரப்பட்டது. இங்கு குடிநீர், மின் விளக்கு, வீடு என அடிப்படை வசதிகளை சீரமைக்கவேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். கோரிக்கைகளை நிறைவேற்றதாதால் நம்பியார் நகர் மீனவர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நேற்று காலை, கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின் மீனவ பிரதிநிதிகள் கலெக்டரை சந்தித்தது போது, ஆர்.டி.ஓ., தலைமையில் சமாதான கூட்டம் நடத்தி தீர்வு காண அறிவுறுத்தினார். இதில் ஆத்திரமடைந்த மீனவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். போராட்டம் 5 மணி நேரம் நீடித்ததால் பெண்கள் சிலர் மயங்கினர். பின்னர் மீனவர்களை கிராம முக்கியஸ்தர்கள் சமாதானப்படுத்தி, போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்தனர். ஆம்புலன்ஸை திருப்பி அனுப்பிய மீனவர்கள் போராட்டத்தில் போது நாகூரில் இருந்து நாகை நோக்கி வந்த 108 ஆம்புலன்ஸ்சை போராட்டக்காரர்கள் நிறுத்தி , ஆம்புலன்சில் ஆட்கள் இல்லாமல் இருந்ததால் டிரைவரிடம் விளக்கம் கேட்டு, வழிவிட மறுத்து மீண்டும் சாலையில் அமர்ந்தனர். ஆம்புலன்ஸ் டிரைவர், சைரனை ஆப் செய்து விட்டு திரும்பி சென்றார்.