இலங்கைக்கு தப்ப முயன்ற காஞ்சிபுரம் மோசடி நபர் கைது
நாகப்பட்டினம்:தமிழகம் முழுவதும் வேலை வாங்கி தருவதாக மோசடியில் ஈடுபட்ட காஞ்சிபுரம் ஆசாமி, இலங்கைக்கு தப்பி செல்ல முயன்றபோது கைது செய்யப்பட்டார்.காஞ்சிபுரம் மாவட்டம், பொழிச்சலுாரை சேர்ந்தவர் கிருபாகரன்,37. இவர், தமிழகம் முழுவதும் பல இடங்களில், வேலை தேடும் இளைஞர்களை குறி வைத்து, வெளி நாட்டில் வேலை பெற்று தருவதாக பணம் மோசடியில் ஈடுபட்டுள்ளார். பல போலீஸ் ஸ்டேஷன்களில் இவர் மீது புகார் உள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலும் சிலரிடம் மோசடியில் ஈடுப்பட்டதால், மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து தேடி வந்தனர்.இந்நிலையில், நாகை துறைமுகத்தில் இருந்து கப்பல் மூலம் இலங்கை தப்புவதற்காக கிருபாகரன் வந்துள்ளார். துறைமுகத்தில் இருந்த அதிகாரிகள் கிருபாகரனை பிடித்து நாகை டவுன் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.