நாகை மீனவர்களை தாக்கிய கடற்கொள்ளையர்
நாகப்பட்டினம்:நாகை மாவட்டம் செருதுாரில் இருந்து 100க்கும் மேற்பட்ட மீனவர்கள், பைபர் படகுகளில் செப்., 10ல் மீன்பிடிக்க சென்றனர். நேற்று முன்தினம் இரவு நடுக்கடலில் வேதாரண்யம் தென்கிழக்கில் 15 கடல் மைல் தொலைவில் மீன் பிடித்தனர். அப்பகுதிக்கு அதிவேக இன்ஜின் பொருத்தப்பட்ட படகில் வந்த நான்கு கடற்கொள்ளையர்கள் செருதுாரை சேர்ந்த தேவி, வெண்ணிலா ஆகிய இரண்டு படகுகளில் இருந்த மீனவர்களை கொடூர ஆயுதங்களால் தாக்கி படகில் வைத்திருந்த பல லட்சம் ரூபாய் மீன்பிடி உபகரணங்கள், மீனவர்கள் அணிந்திருந்த வெள்ளி பொருட்களை பறித்தனர். தாக்குதலுக்குள்ளான 12 மீனவர்களும் நேற்று காலை கரை திரும்பினர். படுகாயமடைந்த பாலகிருஷ்ணன் 49, இடும்பன் 47, ரத்தினம் 25, கணேசன் 55, நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.