மேம்பாலத்தில் நின்ற அரசு பஸ் ராசிபுரத்தில் பயணிகள் தவிப்பு
ராசிபுரம், அக். 20-ராசிபுரம் ரயில்வே மேம்பாலத்தில் நின்ற அரசு பஸ்சில் இருந்து பயணிகள் பாதியில் இறங்கி, பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.ராசிபுரத்தில் இருந்து நேற்று மதியம், 12:30 மணியளவில் நாமக்கல்லுக்கு அரசு பஸ் புறப்பட்டது. 30க்கும் மேற்பட்ட பயணிகள் பஸ்சில் உட்கார்ந்திருந்தனர். பஸ் ராசிபுரத்தில் இருந்து நாமக்கல் சாலையில், ரயில்வே மேம்பாலத்தின் மேலே சென்றபோது முன்புற டயர் வெடித்தது. இதனால், பஸ் மேம்பாலத்தில் பாதியில் நின்றது. டயர் வெடித்ததால் பயணிகள் பாதியில் இறக்கவிடப்பட்டு மாற்று பஸ்சில் சென்றனர். பஸ் மேம்பாலத்தில் நின்றதால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.தொடரும் அவலம்ராசிபுரம் பகுதியில் அரசு பஸ்சில் செல்லவே பயணிகள் அச்சப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன் ராசிபுரம் அடுத்த கட்டனாச்சம்பட்டி பகுதியில் சாலையோரம் இருந்த பள்ளத்தில் பஸ் சிக்கியது. இதனால், பயணிகள் பாதியில் இறங்கினர். அப்போது அந்த பஸ்சுக்கு மாற்றாக வந்த மாற்று பஸ்சும் சேற்றில் சிக்கியது. இதனால், குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாமல் பயணிகள் தவித்தனர். இரண்டு நாட்களுக்கு முன் சேலம் சென்ற அரசு டவுன் பஸ் பழைய பஸ்நிலையத்தில் ரிவர்ஸ் கியர் விழாமல் பாதியில் நின்றது. அப்போதும் பயணிகள் மாற்று பஸ்சில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. நேற்றும் நாமக்கல் சென்ற பயணிகள் பாதிவழியில் இறங்கி செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது. ராசிபுரம் பகுதியில் தொடரும் இது போன்ற சம்பவங்களால் அரசு பஸ்சில் அச்சத்துடன் பயணிகள் செல்ல வேண்டியநிலை ஏற்பட்டுள்ளது.