குளவி கொட்டியதில் மயக்கம் தொழிலாளி பத்திரமாக மீட்பு
ராசிபுரம்: ராசிபுரம் அடுத்த ஏ.கே.சமுத்திரத்தை சேர்ந்தவர் ராமசாமி, 65; இவரது தோட்டத்தில் வையப்பமலையை சேர்ந்த ரவி, 46, வேலை செய்து வருகிறார். ரவி வழக்கம்போல், நேற்று காலை வேலைக்கு சென்றார். தோட்டத்தில் உள்ள தென்னை மரத்தில் இளநீர் பறிக்க மேலே ஏறியுள்ளார். அப்போது ரவியை குளவிகள் கொட்டியுள்ளன. இதனால் மரத்திலேயே மயங்கி கிடந்துள்ளார். நீண்ட நேரமாகியும் ரவியை காணாததால் தேடிப்பார்த்துள்ளனர்.அப்போது, ரவி தென்னை மரத்தில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து ராசிபுரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி ரவியை பத்திரமாக மீட்டனர். பின், ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.