விவசாயிகளுக்கு விழிப்புணர்வு முகாம்
விவசாயிகளுக்கு விழிப்புணர்வு முகாம்நாமக்கல்:நாமக்கல் உழவர் சந்தைக்குட்பட்ட, எருமப்பட்டி யூனியன், பழையபாளையம் கிராமத்தில், வேளாண் துணை இயக்குனர் நாசர் அறிவுரைப்படி, விவசாயி கிருஷ்ணமூர்த்தி தோட்டத்தில் விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது.நாமக்கல் உழவர் சந்தை நிர்வாக அலுவலர் சேகர் தலைமை வகித்து, உழவர் சந்தையின் புதிய நடைமுறை, அடையாள அட்டை புதுப்பித்து வழங்குதல், அதற்கான ஆவணங்கள் குறித்து விளக்கினார்.எருமப்பட்டி தோட்டக்கலை உதவி இயக்குனர் ராஜவேல், துறையின் மானிய திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார். உதவி வேளாண் அலுவலர் கோகுல், உழவர் சந்தையில் விலை நிர்ணயம் செய்யும் முறை, புதிய அடையாள அட்டை பெறுவதற்கான வழிமுறை, இணைக்க வேண்டிய ஆவணங்கள் பற்றி விரிவாக எடுத்துக்கூறினார்.மேலும், விலை நிர்ணயம் செய்வதற்கு, வெளி விற்பனை விலை, சில்லரை விலை சேகரித்தல், விவசாயிகள் பதிவு செய்வது குறித்தும், கடை ஒதுக்கீடு செய்தல், வயல் ஆய்வு, இலவச தராசு, இலவச பஸ் வசதி உள்ளிட்ட தகவல்கள் குறித்தும் விளக்கப்பட்டது. வேளாண் துறையினர், முன்னோடி விவசாயிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.