உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை தகுதியான விண்ணப்பம் வரவேற்பு

வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை தகுதியான விண்ணப்பம் வரவேற்பு

நாமக்கல், 'வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது' என, நாமக்கல் கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:படித்து முடித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்காமல், ஐந்து ஆண்டுகளுக்கு மேல் காத்திருக்கும் இளைஞர்களின் துயரை துடைக்கும் வகையில், வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில், மாதம் ஒன்றுக்கு, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு, 200 ரூபாய், தேர்ச்சி பெற்றவர்களுக்கு, 300 ரூபாய், மேல்நிலை கல்வியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, 400 ரூபாய் மற்றும் பட்டதாரிகளுக்கு, 600 ரூபாய் வீதம், மூன்றாண்டு காலத்திற்கு வழங்கப்படுகிறது.அதேபோல், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, மாதம் ஒன்றுக்கு, பத்தாம் வகுப்பு தேர்ச்சி, தேர்ச்சி பெறாதவர்களுக்கு, 600 ரூபாய், மேல்நிலை கல்வியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, 750 ரூபாய், பட்டதாரிகளுக்கு, 1,000 ரூபாய் வீதம், பத்தாண்டு காலத்திற்கு வழங்கப்படுகிறது.கடந்த ஏப்., 1 முதல், வரும், 30 வரையிலான காலாண்டிற்கு, மேற்கண்ட கல்வி தகுதிகளை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து, ஐந்தாண்டு காலம் முடிவுற்ற பதிவுதாரர்களும், மையத்தில் பதிவு செய்து ஓராண்டு முடிவுற்ற அனைத்து மாற்றுத்திறனாளிகளும் தகுதியானவர்கள்.ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், 45 வயதுக்கு மிகாமலும், ஏனையோர், 40 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். மேற்கண்ட தகுதியுடையவர்கள் உடனடியாக மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு அனைத்து அசல் சான்றிதழ்கள் மற்றும் அடையாள அட்டை ஆகியவற்றுடன் நேரில் செல்ல வேண்டும். மேலும், www.tnvelaivaaippu.gov.inஎன்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை