அரசு போக்குவரத்து ஓய்வூதியர் சங்க ஆலோசனை கூட்டம்
நாமக்கல்: நாமக்கல்லில், அரசு போக்குவரத்து ஓய்வூதியர் நலமீட்பு சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது. மாநில தலைவர் கதிரேசன் தலைமை வகித்து, கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இதில், 107 மாதங்களாக வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள அகவிலைப்படி உயர்வை, அரசு உடனடியாக வழங்க வேண்டும். கடந்த, 2023 ஏப்., முதல் 2024 அக்., வரையில் ஓய்வு பெற்ற போக்குவரத்து கழக ஊழியர்களின் ஓய்வுக்கான பணப்பலன்களை வழங்க வேண்டும்.பிடித்தம் இல்லாத இலவச மருத்துவ காப்பீடு திட்டத்தை அமல்படுத்த வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் வலியுறுத்தப்பட்டன. இந்த கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிட்டால், டிச., 17ல், மாநிலம் தழுவிய அரை நிர்வாண போராட்டம் நடத்தப்படும் என, தெரிவித்தனர்.கவுரவ தலைவர் மாரிமுத்து, இணை செயலாளர் சுப்பராயன், ஒருங்கிணைப்பாளர் முருகானந்தம், நாமக்கல் கிளை தலைவர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட ஓய்வூதியர் சங்க உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.