யுனிவர்சல் சோம்போ நிறுவனம் ரூ.80,000 இழப்பீடு வழங்க உத்தரவு
நாமக்கல்:'விபத்துக்குள்ளான கார் உரிமையாளருக்கு, 80,000 ரூபாய் இழப்பீடு, இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்க வேண்டும்' என, நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.நாமக்கல் மாவட்டம், மனுவகாட்டுபாளையத்தை சேர்ந்தவர் சுந்தரம், 54. இவருக்கு சொந்தமான, 'மாருதி ஆம்னி' காருக்கு, 'யுனிவர்சல் சோம்போ ஜெனரல் இன்சூரன்ஸ்' நிறுவனத்தில், 2021 அக்., முதல், ஓராண்டுக்கு பிரீமியம் செலுத்தி, இன்சூரன்ஸ் செய்திருந்தார். 2022 ஜூனில், இவரது வாகனம் விபத்துக்குள்ளானது.கார் பழுதை சரி செய்ய, இன்சூரன்ஸ் நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற, சர்வீஸ் சென்டரில் விட்டார். அங்கு, 1.25 லட்சம் ரூபாய் செலவானது. ஆனால், இன்சூரன்ஸ் நிறுவனம், 60,000 ரூபாயை மட்டுமே சர்வீஸ் சென்டருக்கு வழங்கியது.இதனால், 2023, பிப்ரவரியில், நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில், சுந்தரம் வழக்கு தொடுத்தார். விசாரணை முடிந்து, மாவட்ட நுகர்வோர் நீதிபதி ராமராஜ் தலைமையிலான அமர்வு, நேற்று தீர்ப்பளித்தது.அதில், 'காரின் உரிமையாளருக்கு ஏற்பட்ட மன உளைச்சல், சிரமங்களுக்கு இழப்பீடு சேர்த்து, கூடுதலாக, 80,000 ரூபாயை, நான்கு வாரங்களுக்குள் வழங்க வேண்டும்' என உத்தரவிட்டனர்.