மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில்213 பேருக்கு ரூ.69 லட்சத்தில் உதவி
நாமக்கல்:'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாமில், 213 பேருக்கு, 69 லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை, தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்.நாமக்கல், ப.வேலுார், திருச்செங்கோடு சட்டசபை தொகுதிக்குட்பட்ட, நாமக்கல், மோகனுார், கபிலர்மலை ஒன்றியங்கள், நாமக்கல் வகுரம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில், 'மக்களுடன் முதல்வர்' மூன்றாம் கட்ட சிறப்பு முகாம், நேற்று நடந்தது.கலெக்டர் உமா தலைமை வகித்தார். எம்.பி.,க்கள் ராஜேஸ்குமார், மாதேஸ்வரன், எம்.எல்.ஏ., ராமலிங்கம், மாநகராட்சி மேயர் கலாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், 213 பேருக்கு, 69 லட்சம் ரூபாய் மதிப்பில், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசியதாவது:தமிழக முதல்வர் ஸ்டாலின், ஆட்சி பொறுப்பேற்ற, நான்கு ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி மக்கள் நலன் காத்து வருகிறார். 'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம், 3-ம் கட்டமாக நடத்தப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்தில், 2024 பிப்., 21 முதல், தற்போது வரை, 55 முகாம்கள் நடத்தப்பட்டு, 21,361 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளன. பொதுமக்களின் அனைத்து கோரிக்கைகளுக்கும் தீர்வு வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.தொடர்ந்து, பல்வேறு துறை சார்பில், மொத்தம், 213 பயனாளிகளுக்கு, 69 லட்சம் ரூபாய் மதிப்பில், அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார். துணை மேயர் பூபதி, முன்னாள் எம்.எல்.ஏ., மூர்த்தி, அட்மா குழு தலைவர்கள் பழனிவேல், நவலடி, சண்முகம், தங்கவேல், டி.ஆர்.ஓ., சுமன், அரசுத்துறை அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.