வெண்ணந்துார்:''கடந்த,
அ.தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்பதற்கு,
பொள்ளாச்சி சம்பவமே உதாரணம்,'' என, எம்.பி., ராஜேஸ்குமார்
குற்றம்சாட்டி பேசினார். வெண்ணந்துார் ஒன்றியம்,
கட்டனாச்சம்பட்டி மற்றும் குட்டலாடம்பட்டி பகுதியில் ஒன்றிய
செயலாளர் துரைசாமி தலைமையில், 'இண்டியா' கூட்டணி வேட்பாளர்
மாதேஸ்வரனை ஆதரித்து பிரசாரம் நடந்தது. கிழக்கு மாவட்ட செயலாளரும்,
மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான, எம்.பி., ராஜேஸ்குமார்,
சேலம் கிழக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளரும், முன்னாள் அமைச்சர்
வீரபாண்டி ஆறுமுகத்தின் மகனுமான பிரபு, ஆகியோர் இணைந்து பிரசாரம்
மேற்கொண்டனர்.அப்போது, எம்.பி., ராஜேஸ்குமார் பேசியதாவது:
கடந்த, அ.தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத
சூழ்நிலை இருந்தது. அதன் உச்சக்க ட்ட வெளிப்பாடு தான்,
பொள்ளாச்சியில் இளம்பெண்களுக்கு தொடர்ச்சியாக நடந்த பாலியல்
கொடூரங்கள். இச்சம்பவம், ஒட்டுமொத்தத் தமிழகத்தையே உலுக்கியது.
இதனால், தாய்மார்களும், பெண் பிள்ளைகளை கொண்ட குடும்பத்தாரும்
பாதுகாப்பில்லாத சூழலை நினைத்து அச்சத்தில் வாழ்ந்து வந்தனர்.ஆனால்,
தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழல் உருவாக்கி
தரப்பட்டுள்ளது. பெண்கள் மீது நடக்கும் பாலியல் குற்றங்களுக்கு கடும்
தண்டனை வழங்கப்பட்டு வருகிறது. சமூகத்தில் பெண்களின் வாழ்க்கை தரம்
மேம்பட, முதல்வர் ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளார்.
குறிப்பாக, மகளிருக்கு இலவச பஸ் பயணம், மகளிர் உரிமைத்தொகை,
புதுமைப்பெண் திட்டம், மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடன் தள்ளுபடி
என பெண்கள் முன்னேற வழிவகுக்கும் திட்டங்கள், இந்தியாவிற்கு
முன்னோடி திட்டமாக உள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலினின் கரத்தை மேலும்
வலுப்படுத்த, உதயசூரியன் சின்னத்தில் ஓட்டளிப்பீர்.இவ்வாறு அவர் பேசினார்.மாவட்ட
பொருளாளர் பாலச்சந்தர், ஊராட்சி மன்ற தலைவர் தங்கதுரை, கிளை
செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகி பூபாலன், கூட்டணி கட்சி
நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.