30 சதவீதம் மானியத்தில் கடன் மாஜி படைவீரர்களுக்கு அழைப்பு
நாமக்கல்: நாமக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில், 'முதல்வரின் காக்கும் கரங்கள்' திட்டத்தில், விண்ணப்பித்திருந்த தொழில் முனைவோர்களுக்கு, தொழில் முனைவோர் மற்றும் புத்தாக்க நிறுவனம் மூலம் பயிற்சி முகாம் நடந்தது. கலெக்டர் உமா தலைமை வகித்து பேசியதாவது:தமிழக முதல்வர், தாய்நாட்டின் பாதுகாப்பிற்காக எல்லையில் பணிபுரிந்து வரும் ராணுவ வீரர்களின் நலன் கருதி, முன்னாள் ராணுவ வீரர்கள் தொழில் தொடங்க, ஒரு கோடி ரூபாய் வரை கடனுதவி வழங்க வகை செய்யும், 'முதல்வரின் காக்கும் கரங்கள்' திட்டம் தொடங்கப்படும் என அறிவித்தார். இத்திட்டத்தின் கீழ், முன்னாள் படைவீரர்கள் தொழில் தொடங்க, ஒரு கோடி ரூபாய் வரை வங்கிகள் மூலம் கடன் பெறுவதற்கு வழிவகை செய்யப்படும். இத்திட்டம் மூலம் தொடங்கப்படும் தொழில்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையில், 30 சதவீதம் மூலதன மானியமும், 3 சதவீதம் வட்டி மானியமும் வழங்கப்படும். ராணுவ பணியின் போது உயிரிழந்த படைவீரர்களின் குடும்பத்தினரும், இத்திட்டம் மூலம் பயன்பெறலாம். இவ்வாறு அவர் பேசினார்.மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல், முன்னாள் படைவீரர் நலன் உதவி இயக்குனர் ரகுபதி உட்பட பலர் பங்கேற்றனர்.