டெங்கு, தொற்றுநோய் தடுப்பு முன்னெச்சரிக்கை மக்கள் ஒத்துழைக்க கலெக்டர் வேண்டுகோள்
டெங்கு, தொற்றுநோய் தடுப்பு முன்னெச்சரிக்கைமக்கள் ஒத்துழைக்க கலெக்டர் வேண்டுகோள்நாமக்கல், அக். 2-''டெங்கு, தொற்றுநோய் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில், பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்,'' என, கலெக்டர் உமா பேசினார்.நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், டெங்கு, தொற்றுநோய் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடந்தது.கலெக்டர் உமா தலைமை வகித்து பேசியதாவது:நாமக்கல் மாவட்டத்தில், டெங்கு, தொற்று நோய் பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, சுகாதாரத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் போன்ற பல்வேறு துறைகளுடன் ஒருங்கிணைந்து, கொசு ஒழிப்பு போன்ற தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உள்ளாட்சி அமைப்புகளில், அதிகளவில் துாய்மை பணிகளை மேற்கொள்ள வேண்டும். காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். குறிப்பாக பள்ளி மாணவர்கள் தனிக்கவனம் செலுத்தி, மூன்று நாட்களுக்கு மேல் தொடர் காய்ச்சல் இருந்தால், உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று, மருத்துவ பரிசோதனை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.மழைக்காலங்களில் மழை நீரானது வீடுகளை சுற்றிலும், வீடுகளின் மேற்பகுதிகளிலும் தேங்குவதற்கு வாய்ப்புள்ளது. டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும், 'ஏடிஸ்' வகை கொசுக்கள் நன்னீரில் மட்டுமே இனப்பெருக்கம் செய்து உற்பத்தியாகும். அனைத்து அரசு, தனியார் நிறுவனங்கள், பள்ளிகள், கல்லுாரிகள், விடுதிகள், தொழில் நிலையங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள், காலிமனைகள், பயன்பாட்டில் இல்லாத வீடுகள், திரையரங்குகள், திருமண மண்டபங்கள், பஸ், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் மழைநீர் தேங்காமல் இருக்க தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். எதிர்வரும் பருவ மழையின் போது, தொற்று நோய் பரவாமல் இருக்க அரசு, உள்ளாட்சி அமைப்புகள் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், பொதுமக்களும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல், சுகாதாரப்பணிகள் நல அலுவலர் பூங்கொடி, பஞ்., உதவி இயக்குனர் ரவிச்சந்திரன், அரசுத்துறை அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.