சேந்தமங்கலத்தில் ரூ.5 கோடி மதிப்பில்வளர்ச்சித்திட்ட பணிகள்: கலெக்டர் ஆய்வு
நாமக்கல்,:சேந்தமங்கலம் வட்டத்தில், ரூ.5 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து, நாமக்கல் கலெக்டர் உமா ஆய்வு மேற்கொண்டார்.சேந்தமங்கலம் வட்டம், திருமலைப்பட்டி ஊராட்சி, எடையபட்டியில் ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் திட்டத்தின் கீழ், சமுதாயக்கூடம் அமைக்க இடம் தேர்வு செய்வது குறித்து நிலத்தின் வகைபாடு, புல விபரம், நிலத்தின் பதிவேடுகள் மற்றும் வரைபடம் குறித்து, கலெக்டர் உமா ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, உத்திரகிடிகாவல் ஊராட்சி, சேந்தமங்கலம் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி அருகில், பழங்குடியினர் நலத்துறை சார்பில், பழங்குடியின நல மாணவியர் விடுதி மற்றும் சேந்தமங்கலம் அரசு தொழிற்பயிற்சி நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்வது குறித்து ஆய்வு மேற்கொண்டார்.அதேபோல், உத்திரகிடிகாவல் ஊராட்சியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில், 4.96 கோடி ரூபாய் மதிப்பில் 2,000 மெ.டன் கொள்ளளவு கொண்ட புதிய வட்ட செயல்முறை கிடங்கு அமைக்கும் பணி நடந்து வருவதை பார்வையிட்டு, கட்டுமான பணிகளை ஒப்பந்த காலத்திற்குள் முடிக்க வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். பொம்மசமுத்திரம் கிராமத்தில், வீட்டுமனை பட்டா வழங்கும் சிறப்பு திட்டத்தின் கீழ், விண்ணப்பித்திருந்த நபர்களின் குடியிருப்புகளுக்கு நேரில் சென்று, குடியிருப்புவாசிகளிடம் நீண்ட ஆண்டுகளாக வசிப்பதற்கான வீட்டு வரி ரசீது, மின் இணைப்பு ரசீது, வருமான வரம்பு உள்ளிட்ட ஆவணங்களை சரி பார்த்து ஆய்வு மேற்கொண்டார்.